17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கனமழை எதிரொலி; தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் பாதுகாப்புடன் இருக்க தென்காசி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்..

கனமழை எதிரொலி; தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் பாதுகாப்புடன் இருக்க தென்காசி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்..

எழுதியவர்: mohan December 3, 2023, 11:11 am

தென்காசி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால், நீர் நிலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளின் அருகில் வசிக்கும் பொதுமக்கள் பின்வரும் வழிமுறைகளை பின்பற்றி பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் துரை. இரவிச்சந்திரன் அறிவுறுத்தியுள்ளார். தென்காசி மாவட்டத்தில் கனமழை காலங்களில், பொதுமக்கள் நீர்நிலைகள் மற்றும் ஆற்றில் குளிக்கச் செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பொது மக்கள் அனைவரும், இடி மின்னலுடன் கனமழை பெய்து வரும் போது திறந்த வெளியில் நிற்பதையும், நீர்நிலைகளில் குளிப்பதையும், மரங்கள் மற்றும் உலோக கட்டமைப்புகளின் கீழ் நிற்பதையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும். மழை, வெள்ளநீர் தேங்கும் இடங்களில் கால்நடைகளை கட்டி வைக்கக் கூடாது. வெள்ளப் பெருக்கு ஏற்படுவதற்கு முன்னர் கால்நடைகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். வெள்ளப் பெருக்கு ஏற்படும் சமயங்களில் தாழ்வான பகுதிகளிலும், நீர்நிலைகளின் இரு கரைகளிலும் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். பொதுமக்கள் தங்களது ஆதார், குடும்ப அட்டை உள்ளிட்ட முக்கியமான ஆவணங்களை பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். பேரிடர் காலங்களில், பொதுமக்கள் டார்ச்லைட், மருந்துகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை வைத்திருப்பதுடன் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் துரை. இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.மேலும், தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பேரிடர் கால நடவடிக்கைகள் மேற் கொள்ள 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அவசர கால கட்டுப்பாட்டு அறையில் தொலைபேசி எண்களும் செயல்பட்டு வருகிறது. கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் 04633 290548 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு மழை, வெள்ளம் மற்றும் பேரிடர்கள் குறித்து பொது மக்கள் தகவல் தெரிவிக்கலாம். பெறப்படும் புகார்கள் மீது, உடனடி நடவடிக்கை எடுக்கும் வகையில் கட்டுப்பாட்டு அறையில் சுழற்சி முறையில் பணிபுரியும் அலுவலர்கள் மூலம் புகார்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் நேரடியாக தெரிவிக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் துரை. இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!