இராமநாதபுரம், அக்.20- இராமநாதபுரத்தில் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் திட்டம் தொடர்பாக அரசுத்துறைகள், மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு, தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கான விளக்க கூட்டம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நடந்தது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் தொடங்கி வைத்தார். அவர் பேசுகையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் 34 ஆயிரத்து 215 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதில் 16,053 மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை பெறுவதற்கு வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் குறைதீர் நாள் கூட்டங்களில் கோரிக்கை மனுக்களை பெற்று தீர்வு காணப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரம் மேம்பட18 வயது முதல் 60 வயது வரை மாற்றுத்திறனாளிகளுக்கு மானியத்துடன் கூடிய சுயதொழில் கடனுதவி வழங்கப்பட்டு வருகின்றன. அனைவரும் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்காக பணியாற்றும்போது மாற்றுத்திறனாளிகள் பயன்பெறுவர். இவ்வாறு கலெக்டர் பேசினார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை துணை இயக்குநர் கு.சரளா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் இரா.பாலசுந்தரம், பயிற்றுநர்கள் தேவகுமார், சங்கர் சகாயராஜ், மாவட்ட திட்ட மேலாளர் பலர் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரத்தில் 16 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்மார்ட் கார்டு: கலெக்டர் தகவல்..
எழுதியவர்: ஆசிரியர் October 20, 2023, 10:22 am




You must be logged in to post a comment.