17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தமிழ்நாடு சிறுபான்மை ஆணையம் சார்பில் கல்லூரி மாணவ மாணவியருக்கான பேச்சுப் போட்டி; ஆணைய தலைவர் தகவல்..

தமிழ்நாடு சிறுபான்மை ஆணையம் சார்பில் கல்லூரி மாணவ மாணவியருக்கான பேச்சுப் போட்டி; ஆணைய தலைவர் தகவல்..

எழுதியவர்: mohan January 23, 2022, 10:13 am

தமிழ்நாடு சிறுபான்மை ஆணையம் சார்பில் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கான பேச்சு போட்டி நடத்தப்பட உள்ளது.இது குறித்து தமிழ்நாடு அரசு சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு முதலமைச்சரின் அனுமதி மற்றும் ஆலோசனையின் பேரில் தமிழ்நாடு சிறுபான்மை ஆணையம் கல்லூரி மாணவ, மாணவியருக்கான தமிழ் மற்றும் ஆங்கில பேச்சு போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மத நல்லிணக்கம், சமூக நல்லிணக்கம், சமூக நீதி, சாதியற்ற தமிழகம், சமூக நீதியுடன் கூடிய பொருளாதார வளர்ச்சி, மாநில உரிமைகள், தமிழர் பண்பாடு போன்ற உன்னத கொள்கைகளையும், லட்சியங்களையும் இன்றைய இளந்தலைமுறைக்கு அறிமுகப்படுத்திட இப்போட்டிகள் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படும். மாவட்டங்களில் உள்ள அனைத்து கல்லூரிகளையும் சேர்ந்த மாணவர்கள் சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் நடக்கும் பேச்சுப்போட்டிகளில் கலந்து கொள்ளலாம். தமிழிலும், ஆங்கிலத்திலும் தனித்தனியாக போட்டிகள் நடத்தப்படும். மாவட்ட அளவில் நடத்தப்படுகின்ற போட்டிகளுக்கு முதல் பரிசாக ₹20ஆயிரமும், 2ம் பரிசாக ₹10ஆயிரமும், 3ம் பரிசாக ₹5ஆயிரமும் வழங்கப்படும். மாவட்ட அளவில் முதல் பரிசு பெற்ற மாணவர்கள் மூலம் மாநில அளவிலான இறுதி போட்டி நடைபெறும். அதில் வெற்றி பெறும் மாணவனுக்கு முதல் பரிசாக ₹ ஒரு லட்சமும், 2ம் பரிசாக ₹50ஆயிரமும், 3ம் பரிசாக ₹25ஆயிரமும் வழங்கப்படும். மாவட்ட அளவில் மற்றும் மாநில அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆங்கில பேச்சு போட்டிகளுக்கும், பேராசிரியர் ஹாஜாகனி தமிழ் பேச்சு போட்டிகளுக்கும் ஒருங்கிணைப்பாளர்களாக செயல்படுவார்கள். மாவட்டங்களில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்து கல்லூரிகளுக்கும் போட்டி சம்பந்தமான அனைத்து விவரங்களும் தனித்தனியாக அனுப்பி வைக்கப்படும். தமிழிலும், ஆங்கிலத்திலும் நடத்தப்படும் இப் போட்டிகளுக்கு தனித்தனியாக பரிசுகள் வழங்கப்படும். மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்று பயன்பெறுமாறு சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் அறிக்கையில் கூறியுள்ளார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!