18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வீராணம் பகுதியில் குடிநீர் முறையாக வழங்கப்படாததை கண்டித்து பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்..

வீராணம் பகுதியில் குடிநீர் முறையாக வழங்கப்படாததை கண்டித்து பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்..

எழுதியவர்: mohan January 13, 2022, 9:34 am

வீராணம் பகுதியில், குடிநீர் முறையாக வழங்காததை கண்டித்து பொதுமக்கள் காலி குடங்களுடன் பஞ்சாயத்து அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தென்காசி மாவட்டம் வீ.கே.புதூர் தாலுகாவிற்கு உட்பட்ட, சுரண்டை அருகே உள்ள வீராணத்தில் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

ஊராட்சியின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக பஞ்சாயத்து அலுவலகம் அருகில் உள்ள 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட பெரிய நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 5 சிறிய நீர்த்தேக்கத் தொட்டிகள் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வீராணத்தில் 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட வாட்டர் டேங்க் கட்டப்பட்டது. கிராமத்தின் மேற்குப் பகுதியில் தாழ்வான இடத்தில் கட்டப்பட்டு இதுவரை பயன்படுத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் முன்னறிவிப்பு எதுவுமின்றி திடீரென புதிய தொட்டிக்கு தண்ணீர் அனுப்பப்பட்டு அங்கிருந்து மற்ற சிறிய தொட்டிகளுக்கு தண்ணீர் செல்லும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. பஞ்சாயத்து அலுவலகம் அருகில் உள்ள மேடான பகுதியில் உள்ள 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டியில் இருந்து கடந்த 30 ஆண்டுகளாக தண்ணீர் வழங்கி வந்த நிலையில், தாழ்வான பகுதியில் இருந்து மேற்கு பகுதிக்கு தண்ணீர் அனுப்புவதால் குடிநீர் சரியாக வருவதில்லை. மேலும் புதிய குடிநீர் தொட்டியில் இருந்து பஞ்சாயத்து அலுவலகம் அருகில் உள்ள குடிநீர் தொட்டிக்கு குழாய் இணைப்புகளும் போடப்படவில்லை. எனவே தண்ணீர் குடி தண்ணீர் இல்லாமல் கடந்த 10 நாட்களாக பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டு வந்தனர். பஞ்சாயத்து நிர்வாகத்தின் சார்பில் டிராக்டர்கள் மூலம் கடந்த ஒரு வார காலமாக குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று காலையில் பழைய குடிநீர் தொட்டி மூலம் உடனடியாக குடிநீர் வழங்க கோரிக்கை விடுத்து பெண்கள் காலி குடங்களுடன் பஞ்சாயத்து அலுவலகம் முன்பாக திரண்டனர். ரோட்டில் அமர்ந்து முற்றுகை போராட்டத்திலும் ஈடுபட்டனர். சம்பவம் குறித்து அறிந்த பஞ்சாயத்து தலைவர் வீராணம் வீரபாண்டியன், வீரகேரளம்புதூர் தாசில்தார் மாரிமுத்து, சுரண்டை இன்ஸ்பெக்டர் சுரேஷ், ஒன்றிய கவுன்சிலர் ஷேக் முஹம்மது ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுடன் பேசி பழைய வாட்டர் டேங்கில் இருந்து தொடர்ந்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து பெண்கள் கலைந்து சென்றனர்.இச்சம்பவம் வீராணம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!