கீழக்கரை நகராட்சியின் மெத்தனப்போக்கின் காரணமாக 20வது வார்டு சி.எஸ்.ஐ சர்ச் பகுதி மற்றும் 21 வது வார்டு மக்கள் தினம் தினம் பெரும் அவதிக்குள்ளாகிறார்கள். இப்பகுதியல் கால்வாயில் ஓட வேண்டிய கழிவு நீர் வீட்டிற்குள் வீட்டிற்குள் வழிந்தோடும் அவல நிலை.
இந்த பகுதியில் காலங்கள் மாறினாலும், காட்சிகளும், ஆட்சிகளும் மாறினாலும் இப்பகுதியின் சாக்கடை நிலைமை மட்டும் மாறுவதில்லை. இது யாருடைய குற்றம்?? நகராட்சியின் குற்றமா?? அரசியல்வாதிகளின் குற்றமா?? இல்லவே இல்லை தகுதியற்றவர்களை ஆட்சி மகுடத்தில் வைத்து அழகு பார்த்ததன் விளைவு இன்று பொதுமக்கள் அவதிக்குள்ளாகிறார்கள்.
இப்பகுதியில் உள்ள சுகாதார பிரச்சினையால் இப்பகுதி மக்களுக்கு, முக்கியமாக சிறு குழந்தைகள் அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் காய்ச்சல் போன்றவைகளால் அவதிப்படுகின்றனர். பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகள் முதல் வேலைக்கு செல்லும் பெரியவர்கள் வரை இந்த சாக்கடை நீரை கடந்துதான் செல்ல வேண்டும்.
இவ்வளவு சுகாதார கேடும் நிறைந்த இப்பகுதியில் தான் ரேசன் கடையும் அமைந்துள்ளது. மேலும் இப்பகுதியில் இருக்கும் மருத்துவமனைகளும் திறந்த வெளியில் மருத்துவ கழிவுகளை கொட்டி அவர்களுடைய வருமானத்திற்கும் வழி வகுத்துக் கொள்கிறார்கள். இப்பிரச்சினைக்கு கீழக்கரை நகராட்சி இதனை உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களா?? அல்லது மக்கள் போராட்ட களத்தில் இறங்கினால்தான் தீர்வு காண்பார்களா என்பது நகராட்சி எடுக்கும் நடவடிக்கையை பொறுத்துதான் உள்ளது. பிற ஊர்களில் நகராட்சி மட்டுமே தூய்மை பணியில் ஈடுபடும் பொழுது, கீழக்கரையில் மட்டுமே தனியார் சமூக அமைப்பும் இந்த தூய்மை பணியை செய்கிறது, அப்படியிருந்தும் ஏன் இந்த அவல நிலை என்பதுதான் மக்கள் மனதில் எழும் பெரிய கேள்வி குறி???








You must be logged in to post a comment.