18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தென்காசி மாவட்டத்தில் கபசுர குடிநீர் வழங்கும் பணி தீவிரம்; மாவட்ட ஆட்சியர் தகவல்..

தென்காசி மாவட்டத்தில் கபசுர குடிநீர் வழங்கும் பணி தீவிரம்; மாவட்ட ஆட்சியர் தகவல்..

எழுதியவர்: mohan May 5, 2021, 12:34 pm

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு கபசுரகுடிநீர் வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது குறித்து தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது: தென்காசி மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைள் மாவட்ட ஆட்சியர் அறிவுரைப்படியும், ஆலோசனைப்படியும் மிகவும் துரிதமாகவும், சிறப்பாகவும் மாவட்ட முழுவதும் நடைபெற்று வருகிறது. அதில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் பங்காக சித்த மருந்தான கபசுரகுடிநீர் வழங்கும் முகாம் மாவட்ட ஆட்சியரால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கப்பட்டு, தொடர்ந்து அனைத்து இடங்களிலும், பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. முக்கியமாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் நடக்கும் காய்ச்சல் முகாம்களில் ஸ்வப் பரிசோதனை எடுக்கும் அனைவருக்கும் கபசுரகுடிநீர் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அப்பகுதியிலுள்ள தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் உள்ள கோவிட் நோயாளிகளுக்கு சித்த ஆயுஷ் மருந்துகள், சிறப்பு யோகா மருத்துவ முறைகள், உணவு முறைகள் பற்றிய ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது. அங்குள்ள ஐஎல்ஐ நோயாளிகளுக்கும் சித்த ஆயுஷ் மருந்துகள், கபசுரகுடிநீர் வழங்கப்படுகிறது. இலவசமாக அந்தந்த பகுதிகளிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆயுஷ் மருத்துவர்கள் மூலமாக வழங்கப்படுகிறது. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் சித்த, ஆயுஷ் மருத்துவர்கள் நோய் எதிர்ப்பு சக்திக்கு கபசுரகுடிநீர், நிலவேம்பு குடிநீர் இலவசமாக கொரோனா பரிசோதனை எடுக்கும் நபர்களுக்கும், என்சிடி நோயாளிகளுக்கும், கர்ப்பிணி தாய்மார்களுக்கும், காய்ச்சல்(ஓபி) உள்ளவர்களுக்கும் வழங்கப்படுகிறது. அரசு மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் உள்ள கோவிட் நோயாளிகளுக்கும், சித்த ஆயுஷ் மருந்துகளும், கபசுரகுடிநீரும், சிறப்பு யோகாசன முறைகளும் வழங்கப்படுகிறது. மன உளைச்சலை தடுக்கும் பொருட்டு சிறப்பு தளர்வு முறைகளும் கற்று தரப்படுகிறது. கவுன்சிலிங் கொடுக்கப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கு மக்கள் அதிகம் கூடும் இடங்களான அரசு அலுவலகங்கள், காவல் நிலையம், நீதிமன்றங்கள்,மார்க்கெட், கடைத்தெரு, பஸ் நிலையம், ரேஷன் கடை, உணவகம், டீக்கடை, விற்பனையாளர்கள், போக்குவரத்துத்துறை, ஆட்டோ, டாக்ஸி வாகன ஓட்டுநர்கள் இவர்களுக்கு பஞ்சாயத்து உதவியுடன் கபசுரகுடிநீர் வழங்கப்படுகிறது. மேலும் செக்போஸ்ட் , லாரி மற்றும் வாகன ஓட்டுநர்கள், பொது மக்கள், களப்பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்டோருக்கும் கபசுரகுடிநீர் வழங்கப்படுகிறது. பொதுமக்கள் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!