17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருப்பரங்குன்றம் கோவிலில் பங்குனி பெருவிழா மகா தேரோட்டம்

திருப்பரங்குன்றம் கோவிலில் பங்குனி பெருவிழா மகா தேரோட்டம்

எழுதியவர்: mohan April 1, 2021, 5:36 pm

முருகனின் அறுபடை வீடுகளில் முதற் படைவீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமிஸ திருக்கோவிலில்பங்குனி பெருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக மகா தேரோட்டம் வெகு விமர்சியாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர் .கடந்த 18-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான கைப்பார நிகழ்ச்சி கடந்த 23-ம் தேதியும்; பங்குனி உத்திரம் நிகழ்ச்சி கடந்த 28-ம் தேதியும்; பட்டாபிஷேகம் நிகழ்ச்சி கடந்த 30-ம் தேதியும்; நேற்று திருக்கல்யாண வைபவமும் நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று மகா தேரோட்டம் கோலாகலமாக நடைபெறுகிறது. இதனையொட்டி கோவில் வாசல் முன்பு வண்ணமயமான அலங்கார துணியை கொண்டு 5 அடுக்குகளாக அலங்கரிக்கப்பட்டு பெரிய தேர் தயாராக உள்ளது. தேரின் முன்புறம் தேரினை இழுத்துச் செல்வது போல மரத்திலான 4 குதிரைகள் இணைக்கப்பட்டு உள்ளது.

தேரோட்டத்தையொட்டி அதிகாலை 5:15 மணிக்கு உற்சவர் சன்னதியில் இருந்து மேள தாளங்கள் முழங்க தெய்வானையுடன் முருகப்பெருமான் புறப்பட்டு காவல் தெய்வமான கருப்பசாமி சன்னதிக்கு வந்தார்.அங்கு சிறப்பு பூஜை நடந்தது. இதனையடுத்து தெய்வானையுடன் முருகப்பெருமான் பெரிய தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் தேரின் சக்கரத்தில் தேங்காய் சூறைவிடப்பட்டது.அதன்பிறகு கோவில் முதல் ஸ்தானிகர் சுவாமிநாதன் தேரில் ஏறி நின்று வெள்ளை துணியை அசைக்க. காலை 6:25 மணி அளவில் நிலையில் இருந்து தேர் புறப்பட்டது. அப்போது அங்கு திரளாக கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, வீரவேல் முருகனுக்கு அரோகரா’ என்று அரோகரா கோஷம் எழுப்பி பக்தி பரவசத்துடன் தேரின் வடத்தை பிடித்து இழுத்தனர்.விநாயகர் எழுந்தருளிய சிறிய சட்டத்தேரானது பெரிய தேருக்கு முன்பாக சென்றது. அதை ஏராளமான பெண் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர். சிறிய சட்டத்தேரும், பெரிய தேரும் ஒன்றன்பின் ஒன்றாக கிரிவல பாதையில் ஆடி, அசைந்து பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்தது. அவை கண்கொள்ளா காட்சியாக இருந்தது. 3 கி.மீ. சுற்றளவு கொண்ட கிரிவல பாதையில் 5 மணி நேரம் வலம் வந்த தேர்கள், காலை10.00 மணி அளவில் கோயில் முன்பு நிலைக்கு வந்தன.திருப்பரங்குன்றம் கோவில் சென்ற ஆண்டு கொரோனா நோய்த்தடுப்பு காரணமாக பங்குனி திருவிழா தடைபட்ட நிலையில் இந்த ஆண்டு சிறப்பாக பங்குனி திருவிழா நடைபெற்று வருகிறது.


செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!