17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நெல்லையில் ரேஷன் அரிசி கடத்தல்;பொதுமக்கள் மடக்கி பிடித்ததால் பரபரப்பு..

நெல்லையில் ரேஷன் அரிசி கடத்தல்;பொதுமக்கள் மடக்கி பிடித்ததால் பரபரப்பு..

எழுதியவர்: mohan February 3, 2021, 10:38 am

மானூர் அருகே ரேஷன் அரிசியை கடத்திய ஊழியரை பொது மக்கள் பிடித்து உயர் அதிகாரிகளிடம் ஒப்படைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள குறிச்சிகுளம் ரேஷன் கடையில் நடைபெறும் முறைகேடு குறித்து முஹைதீன் ஆண்டவர் ஜும்மா பள்ளிவாசல் ஜமாஅத் சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு புகார் மனு அளிக்கப்பட்டுள்ள நிலையில், ரேஷன் அரிசியைக் பைக்கில் கடத்தும் பொழுது பொதுமக்கள் மடக்கிப் பிடித்து வீடியோ பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிடிபட்ட ரேஷன் கடை ஊழியர் செந்தில் அந்த வீடியோவில் கூறியிருப்பதாவது: மாதம் தோறும் உயரதிகாரிகளுக்கு 3 ஆயிரத்திலிருந்து 10 ஆயிரம் வரை லஞ்சமாக கொடுக்க வேண்டியது உள்ளதால், நாங்கள் ரேஷன் பொருட்களை கடத்தி விற்பனை செய்தால் தான் உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முடியும். நாங்கள் பணி செய்ய முடியும் என ரேஷன் கடை ஊழியரே கூறியிருப்பது கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஜமாத் சார்பில் கூட்டுறவு சங்க உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த உயரதிகாரிகள் கடையை ஆய்வு செய்த பொழுது இந்த ரேஷன் கடையில் ஏராளமான முறைகேடுகள் நடந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர் விரைவில் சஸ்பெண்ட் செய்யப்படுவார் என உயரதிகாரிகள் தெரிவித்தனர்.ரேஷன் கடைகளில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க டிஜிட்டல் முறைகளில் பல்வேறு நவீன நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ள போதிலும், கிராமப் பகுதிகளிலும்,நகர பகுதிகளிலும் இதுபோன்ற முறைகேடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பதையே இது போன்ற சம்பவம் உணர்த்துகிறது.மேலும் முறைகேடுகள் தடுக்கப்பட்டு ரேஷன் பொருட்கள் விநியோகம் முறையாக நடைபெறுவது உறுதி படுத்தப்பட வேண்டும் என்பதே பொதுமக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!