ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன் (செயலி) மூலம் பணம் இழக்கும் அபாயம் உள்ளது. எனவே இது குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார். இது பற்றிய செய்திக்குறிப்பில் திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் பா.மூர்த்தி தெரிவித்ததாவது, Google Playstore-ல் Grindr (Gay Dating & Chat) (Application) பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த செயலியில், முன் பின் தெரியாத நபர்களிடம் தகவல் பரிமாற்றம் (Chat) செய்யும் வசதி உள்ளது. இந்த செயலியின் மூலம் சில நபர்கள் பொதுமக்களை குறிப்பாக இளம் வயதினரை ஏமாற்றி குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
இச்செயலியினால், முகம் தெரியாத நபர்கள் தொடர்பு கொண்டு அதன் மூலம் பழக்கம் ஏற்பட்டு, ஆசை வார்த்தைகளைக் கூறி தனிமையில் சந்திக்கத் தூண்டி அதன் மூலம் பணம் மற்றும் மதிப்புமிக்க பொருட்களை வழிப்பறி செய்து வருகின்றனர். இது சம்மந்தமாக கிடைக்கப்பெறும் புகார் மனுக்களின் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. திருநெல்வேலி சரகத்தில் உள்ள திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில், இந்த ஆண்டில் மட்டும் 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவ்வழக்குகளில் சம்பந்தப்பட்ட 70 எதிரிகள் கைது செய்யபட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
மேலும், இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து அவர்கள் மீது தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்களும் இது போன்ற குற்ற செயல்புரியும் எண்ணத்தோடு சமூக வலைதளங்கள், பிற தகவல் ஊடகங்கள் ஆகியவற்றில் தங்களை அணுகும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும், இதுபோன்ற ஏமாற்று செயலியின் மூலம் பாதிக்கப்படாமல் கவனமாக இருக்கவும் அறிவுறுத்தப்படுகிறது.
Grindr App மற்றும் அதைப்போன்ற வேறு செயலிகளை பயன்படுத்தி பொதுமக்களை மிரட்டி வழிப்பறி செய்யும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. மேலும், இதுபோன்ற குற்ற செயல்களால் பாதிக்கப்படுபவர்கள் 1930 என்ற கட்டணமில்லா தொலைபேசி சேவையையோ, அருகில் உள்ள காவல் நிலையத்தையோ அல்லது சம்பந்தப்பட்ட மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையையோ தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.