தமிழ் அமைப்புகளுக்கு அரசு நிதி உதவி செய்ய வேண்டும்; கவிஞர் பேரா வலியுறுத்தல்..

தமிழ் அமைப்புகளுக்கு அரசு நிதி உதவி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி நெல்லையில் நடந்த இலக்கிய விழாவில் பொதிகை தமிழ்ச்சங்க நிறுவுநர் கவிஞர் பேரா பேசினார். நெல்லையில் நடந்த தாமிரபரணி இலக்கிய மாமன்றத்தின் 15-ஆவது ஆண்டு விழாவில் பலருக்கும் விருதுகளும் போட்டிகளில் வென்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது. விருது வழங்கும் நிகழ்வுக்கு பொதிகைத் தமிழ்ச் சங்க நிறுவுநரும், தமிழ்ச் சங்கங்களின் கூட்டியக்க அமைப்பாளருமான கவிஞர் பேரா தலைமை தாங்கினார். பொருநை இலக்கிய வட்ட இளைய புரவலர் திருமலையப்பன் முன்னிலை வகித்தார். தாமிரபரணி இலக்கிய மாமன்ற தலைவர் கவிஞர் வ. பாமணி வரவேற்புரை வழங்கினார். பொறியாளர் பாப்பையா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு விருதுகளை வழங்கினார். கவிஞர் பேரா தலைமையுரை ஆற்றினார். அவர் ஆற்றிய தலைமையுரையில், “மகாகவி பாரதியார் விரும்பியபடி தேமதுரத் தமிழோசை உலகமெலாம் கொண்டு செல்லவே நாடெங்கும் தமிழ் அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. தங்களுக்கு இருக்கும் நிதி வசதிகளுக்கேற்ப தமிழ் அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. ஆயினும் போதிய நிதி வசதி இல்லாமல் தடுமாறி வருகின்றன பல அமைப்புகள். இந்தக் குறையைப் போக்கி தமிழ்ப் பணிகளுக்கு ஊக்கம் அளித்திட தமிழ் அமைப்புகளுக்கு தமிழ்நாடு அரசு நிதி உதவி செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

விழாவில் திருக்குறள் அ.க. நவநீதக் கிருட்டிணனார் விருதினை மருத்துவர் ஆ.செந்தில்வடிவு, தென்றலடிகள் அ.மு. சுந்தர விநாயகனார் விருதினை கவிஞர் பா. கௌரிபாஸ்கர கணேசபாண்டிய சொக்கலிங்கம், நற்குணநம்பி தளவாய் இராமசாமி விருதினை கு. சொக்கலிங்கம், தமிழ்க்கடல் நெல்லைக் கண்ணன் விருதினை முனைவர் கோ. சங்கரவீரபத்ரன், புலவர் புலமைப்பித்தன் விருதினை கவிஞர் ந. ஜெயபாலன் ஆகியோர் பெற்றனர். முன்னதாக பா. கௌரி பாஸ்கர கணேசபாண்டியன் சொக்கலிங்கம் எழுதிய கௌரியின் கற்றதைச் சொல்கிறேன் என்ற நூல் வெளியிடப்பட்டது. நிறைவாக சொர்ணவள்ளி நன்றி கூறினார்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!