திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை நீதிமன்ற வாசலில் வாலிபர் ஒருவர் நேற்று சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ஏழு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல் துறையினர் விசாரணையில், பழிவாங்கும் விதமாக இந்த கொலை நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து திருநெல்வேலி மாநகர காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது, திருநெல்வேலி மாநகரம் பாளையங் கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருநெல்வேலி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு 20.12.2024 ஆம் தேதி திருநெல்வேலி தாலுகா காவல் நிலைய குற்ற வழக்கு தொடர்பாக PSJ நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக வந்த மாயாண்டி@பள்ள மாயாண்டி (25) த/பெ.சண்முகம் @ பங்க் மணி, என்பவரை நீதிமன்றம் எதிரே உள்ள அன்னபூர்ணா உணவகத்தில் வைத்து சிலர் தாக்க முயற்சி செய்யவே, அவர்களிடமிருந்து தப்பித்து நீதிமன்றத்தை நோக்கி ஓடிவந்துள்ளார்.
அச்சமயம் அவரை துரத்தி வந்தவர்களில் ஒருவரின் கையில் அரிவாள் இருப்பதை பார்த்த நீதிமன்ற பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் உய்க்காட்டான் என்பவர் அரிவாளுடன் வந்த நபரை விரட்டி பிடிக்க சென்றபோது மாயாண்டியை வெட்ட வந்த மற்ற நபர்கள் நீதிமன்ற நுழைவு வாயிலின் அருகே வைத்து வெட்டிக் கொலை செய்துள்ளனர். சிறப்பு உதவி ஆய்வாளர் உய்க்காட்டான் துரத்தி சென்ற மேற்படி நபரை அன்னப்பூர்ணா உணவகத்தில் வைத்து பிடித்து அவரை விசாரித்த போது, அவர் திருநெல்வேலி மாவட்டம், கீழநத்தம் வடக்கூரை சேர்ந்த முருகேசன் மகன் ராமகிருஷ்ணன்(25) என்பது தெரியவந்தது. விசாரணையில், இறந்த மாயாண்டி என்ற பள்ள மாயாண்டி என்பவர் கடந்த 2023ஆம் வருடம் திருநெல்வேலி தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ராஜாமணி, த/பெ நாராயணன், கீழநத்தம், வடக்கூர் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி என்பதும், மேற்படி கொலைக்கு பழிவாங்கும் விதமாக இக்கொலை நடைபெற்றதும் தெரியவந்தது.
மேலும், இந்தக் கொலையில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளான 1).சிவமுருகன் (19) த/பெ.ரமேஷ், வடக்கூர், கீழநத்தம், 2). தங்கமகேஷ் (21), த/பெ.மணிகண்டன், வடக்கூர், கீழநத்தம். 3).மனோராஜ் (27), த/பெ.நாராயணன், வடக்கூர், கீழநத்தம். 4).முத்துகிருஷ்ணன் (26) த/பெ.ஆறுமுகம், வடக்கூர், கீழநத்தம் ஆகியோர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் வழக்கில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளை கைது செய்ய மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு, குற்றவாளிகளான 5).கண்ணன் (20). த/பெ.சுடலை, அனவரதநல்லூர் 6).கண்ணன் (22), த/பெ.கல்லத்தியான், வடக்கூர், கீழநத்தம் ஆகியோர் உட்பட 7 நபர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகரத்தின் முக்கிய பகுதிகளில் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.