சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்த நபர் கைது;மதுபாட்டில்கள் பறிமுதல்..

தென்காசி அருகே ஆய்க்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்த நபரை சுற்றிவளைத்து காவல்துறை கைது செய்துள்ளது. தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக மது பாட்டில்கள்,போதை பொருட்கள் மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆய்க்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிளாங்காடு கருப்பாநதி ஆற்றுப் பாலம் அருகில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருப்பதாக காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அத்தகவலின் பேரில் சார்பு ஆய்வாளர் மாரிமுத்து தலைமையிலான காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றதில் முட்புதருக்குள் விற்பனைக்காக மதுபாட்டில்களை வைத்திருந்த மேலக்கடையநல்லூர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் மகன் முருகன் (42) என்ற நபரை சுற்றிவளைத்து கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 100 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!