தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நடைபெறும் திருக்குறள் முற்றோதுதல் போட்டியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம் என தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அருண்சுந்தர் தயாளன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் திருக்குறள் முற்றோதல் போட்டி ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இப்போட்டிக்கு 2020 – 2021 ஆம் ஆண்டிற்கு பள்ளி,கல்லூரி மாணவ/மாணவியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.2018 – 2019 ஆம் ஆண்டு முதல் ஓவ்வோர் ஆண்டும் 1330 திருக்குறளையும் ஒப்புவிக்க மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் திருக்குறள் முற்றோதல் போட்டி நடைபெறுகிறது.
இந்தக் போட்டியில் 70 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு தலா ரூ.10 ஆயிரம் பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.இந்தப் போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் திறனறி குழுவினரால் திறனாய்வு செய்யப்பட்டு, தகுதியானவர்கள் பரிசுக்குப் பரிந்துரைக்கப்படுவர். இதற்கான திறனாய்வு திருநெல்வேலி மண்டிலத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநரால் நடத்தப்படும்.போட்டியில் பங்கேற்பவர்கள் 1,330 திருக்குறளையும் முழுமையாக ஒப்புவிக்கும் திறன் பெற்றவர்களாக இருக்கவேண்டும். இயல் எண், அதிகாரம் எண், பெயர், குறள் எண் போன்றவற்றை தெரிவித்தால், அதற்கான திருக்குறளை சொல்லும் திறன் பெற்றவராக இருக்கவேண்டும்.திருக்குறளின் அடைமொழிகள், சிறப்புப் பெயர்கள், சிறப்புகள் ஆகியவற்றையும் அறிந்திருக்க வேண்டும். திருக்குறளின் பொருளை அறிந்திருந்தால் கூடுதல் தகுதியாகக் கருதப்படும்.தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் இந்தப் போட்டியில் பங்கேற்கலாம். ஏற்கனவே இந்தப் பரிசை பெற்றவர்கள் மீண்டும் பங்கேற்கக் கூடாது. போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவ/மாணவியர் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரகத்தின் 2 ஆம் தளத்தில் இயங்கும் மண்டிலத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பப்படிவம் நேரிலோ அல்லது தமிழ் வளர்ச்சித் துறையின் வலைத்தளத்திலோ (www.tamilvalarchithurai.com) இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு 0462—2502521 என்ற எண்ணில் மண்டலத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கிவரும் மண்டலத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்தில் அளிக்கப்பட வேண்டுமென தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அருண் சுந்தர் தயாளன் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்

You must be logged in to post a comment.