நகரமயமாதலின் வீச்சு, நிர்வாகத் தேவைகள், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை திறம்படவும், முழுஅளவிலும் வழங்குதல் (comprehensive manner), உள்ளாட்சிப் பகுதிகளின் எதிர்கால வளர்ச்சிக்கான தேவைகள் ஆகியவற்றை கருத்திற்கொண்டு, தகுதியான மேலும் பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளின் மறுசீரமைப்பை மேற்கொள்ள தமிழக அரசு முடிவு செய்தது.
அதன்படி பெருநகர சென்னை மாநகராட்சி, மதுரை, திருச்சிராப்பள்ளி உள்ளிட்ட16 மாநகராட்சிகளுடன், 4 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள் மற்றும் 149 ஊராட்சிகளை இணைக்கவும், திருவாரூர், திருவள்ளுர், சிதம்பரம் உள்ளிட்ட 41 நகராட்சிகளுடன் 147 ஊராட்சிகள் மற்றும் 1 பேரூராட்சியை இணைக்கவும் தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது.
அதே போல பேரூராட்சிகளுடன் ஊராட்சிகளை இணைத்தும், தனித்தும் கன்னியாகுமரி, அரூர், பெருந்துறை உள்ளிட்ட புதிதாக 13 நகராட்சிகளை அமைத்துருவாக்கவும், கிராம ஊராட்சிகளை இணைத்து மற்றும் தனியாகவும் ஏற்காடு, காளையார்கோவில், திருமயம் உள்ளிட்ட புதிதாக 25 பேரூராட்சிகளை அமைத்துருவாக்கவும், 29 கிராம ஊராட்சிகளை 25 பேரூராட்சிகளுடன் இணைக்கவும் உத்தேச முடிவினையும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு அதற்கான அரசாணையை வெளியிட்டது.
இந்த நிலையில், எல்லைகள் விரிவாக்கம் செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்த நிலையில், அது குறித்த ஆட்சேபனைகளை பொதுமக்கள் 6 வாரங்களில் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை முதன்மை செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தலைமை செயலகம், புனித ஜார்ஜ் கோட்டை என்ற முகவரிக்கு அனுப்பலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆட்சேபனைகள் அனைத்தும் தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் படி பரிசீலனை செய்யப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment.