மணல் திருட்டை தடுத்த துணை தாசில்தாரை டிராக்டர் ஏற்றி கொல்ல முயற்சி..

சாயல்குடி அருகே இன்று அதிகாலை மணல் திருட்டை தடுத்த துணை தாசில்தார் மீது டிராக்டர் ஏற்றி கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே குதிரைமொழி பகுதியில் மணல் திருட்டு நடப்பதாக வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கடலாடி துணை தாசில்தார் செந்தில்வேல் முருகன், இன்று அதிகாலை 5 மணியளவில் குதிரைமொழி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த டிராக்டரை அவர் வழிமறித்தார். ஆத்திரம் அடைந்த மணல் கும்பல், டிராக்டரை நிறுத்தாமல் அதிவேகத்தில் செந்தில்வேல் முருகனை நோக்கி வந்தது. சுதாரித்துக் கொண்ட அவர்   விலகி ஓடி தப்பினார்.

தொடர்ந்து டிராக்டர் அங்கே இருந்த பனைமரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. டிராக்டரை ஓட்டி வந்த டிரைவர் உள்பட கும்பல் தப்பிச் சென்றது. இது குறித்து துணை தாசில்தார் சாயல்குடி காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து டிராக்டரை பறிமுதல் செய்து, மேல்நடவடிக்கைக்காக பரமக்குடி உதவி கலெக்டரிடம் டிராக்டரை ஒப்படைத்தனர். மணல் திருட்டை தடுத்த துணை தாசில்தார் மீது டிராக்டர் ஏற்றி கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!