அம்மா என்றால் அன்பு, கருணை, இனிமை தோன்றும். அப்படிப்பட்ட அன்னையைக் கொண்டாடவே உலக அன்னையர் தினம் 1908ல் இருந்து கொண்டாடப்பட்டு வருகிறது. தாயிற் சிறந்ததொரு கோவிலும் இல்லை. என்ற முதுமொழிக்கேற்ப நாம் கொண்டாடும் அன்னையர் தினம், அன்னைகளுக்கெல்லாம் அன்னையாகத் திகழ்ந்த அன்னா ஜார்விஸ் என்பவர்தான் துவக்கி வைத்து வழி காட்டியவர். அன்னா ஜார்விஸ் திருமணமானவரோ, பிள்ளைகளைப் பெற்றெடுத்தவரோ அல்ல. அன்னை களுக்காக அரும்பாடுபட்டவர் என்பதால் இவரை மையப்படுத்தித்தான் அன்னையர் தினமே உருவாக்கப்பட்டது. தனது அன்னையைப் பாராட்டி, சீராட்டி அன்னையர் தினம் கொண்டாடிய முதல் பெண் என்ற பெருமை இவரையே சாரும். எனினும் பண்டைய காலத்தில் பெண் தெய்வங்களை விசேடமாக வழிபடுவதற்காக இத்தினம் கொண்டாடப்படுவதாகவும் மாற்றுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருசில நாடுகளில் அன்னையர் தினம் வெவ்வேறு தினங்களில் கொண்டாடப்பட்டாலும் பொதுவாக ஒவ்வொரு வருடமும் மேமாதம் வருகின்ற இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையே அன்னையர் தினமாக கொள்ளப்படுகிறது.
சமூக நலனில் அக்கறை கொண்ட ஜார்விஸ், ஏதாவது ஒரு நாளையாவது, எல்லோரும் தங்களது தாயை அவர் உயிரோடு இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி அவளது தியாகத்தையும், தங்களுக்கு அவள் செய்த ஈடிணையற்ற பணியையும் நினைத்து அவளை கெளரவிக்க வேண்டும் என்று விரும்பினார். அதற்காக அவர் கடுமையாக உழைத்தார். அதன் காரணமாக உருவானதே அன்னயைர் தினம். ‘அம்மா’ என்பது உலகிலுள்ள உன்னதமான வார்த்தைகளில் உயர்வான ஒன்றாகும். அந்த வார்த்தைக்கும் அந்த உறவுக்கும் எதையுமே ஈடாக வைக்க முடியாது. எதை வேண்டுமானாலும் இரண்டாக வைத்துக்கொள்ளலாம், அம்மா என்பது ஒன்றே. அந்த உத்தம உறவின் தியாகங்களை நினைவு கூற உலக நாடுகள் எங்கும் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. ஏனெனில் எந்த நாட்டிலும் ஒரு குழந்தை பிறப்பது ஒரு தாய் மூலமே.
ஆயிரம் உறவுகள் இருந்தாலும் அத்தனை உறவுகளினதும் ஆத்மார்த்தமான அன்பை ஒருமிக்கச் செய்து அன்பின் உச்சநிலையைக் காட்டுவது தாயன்பு மட்டுமே. சுயநலம் பாராத, தன் நலம் கருதாத ஒரு உயிர் அம்மா மட்டுமே. அந்தத் தாயன்பை ஒருகணம் உள்ளத்தில் எண்ணிப்பார்க்க உருவாக்கப்பட்டதே அன்னையர் தினமாகும். மேற்குலகத்தாரால் அறிமுகப்படுத்தப்பட்டதெனினும் அன்னையின் அன்பை எம் கண்முன் கொண்டுவருகிறது இந்த நாள். எமது தாய்க்குலத்தை ஒரு நாளாவது நினைப்பது என்பது பொருள் அல்ல, ஒவ்வொரு நாளும் அவள் சேவை செய்கின்றாள். எனவே ஒவ்வொரு நாளும் நினைத்தாலும் அது ஈடாகாது. தூய்மையான அன்பின் மகத்துவத்தை வார்த்தைகளில் அடக்கிவிட முடியாது.
தமிழ்ச் சொற்கள் பெரும்பாழும் எழுப்பப்பட்ட ஓசைகளின் சொற்களாகவே காணப்படுகின்றன. கூ என்று கூவிய கூகை, குர்குர் என ஒலித்த குரங்கு, கர் கர் என உறுமிய கரடி, சர சர வென ஓடிய சாரை என பல எடுத்துக்காட்டுகளைக் கூறலாம். இவ்வகையில் அம்மா என்ற சொல்லும் இயற்கையில் தோன்றிய ஒன்றாகும். பிறந்த குழந்தை அழுவதும் சிரிப்பதுமாக வாயை மூடி மூடித்,திறக்கின்றது. குழந்தை வாயைத் திறக்கும் போது அ என்ற ஒலி எழுகின்றது. வாயை மூடும் போது ம் என்ற ஒலி எழுகின்றது. ம்ம (ம்+அ=ம்ம) என்ற ஒலி மீண்டும் மீண்டும் வெளிவரும் போது அது அம்மா என்ற சொல்லைத் தருகின்றது.
அம்மா இயற்கையாகவே தோன்றிய சொல்லாகும். அம்ம, அம்மு, அம்மை போன்ற சொற்கள் அம்மா என்ற சொல்லுக்குப் பிறகு தோன்றியவைகள். தாய் என்ற சொல் ஆய் என்ற சொல்லின் நீட்சியாகும். ஆய்=அம்மா பாட்டி, பாலமுதைத் தந்த ஆய் தாய் எனப்பட்டாள். குழந்தையை அள்ளி எடுத்து அணைக்கும் தாய் அன்னையெனப்பட்டாள். ஆய், தாய், அன்னை, அம்மை ஆகியவைகள் யாவும் பிற்காலச் சொற்களே. அம்மா+ஆய்ச்சி=அம்மாச்சி. அம்மா என்ற தமிழ்ச் சொல் மா-மாதா-மதத்ரு என்றவாறு வடமொழியில் திரிந்தது எனலாம்.
மானுட வாழ்வில் அன்பின் முதல் வெளிப்பாடாகக் கருதப்படும் தாயன்பு வாழ்வின் அந்தம் வரை தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாகும். ஓடும் இயந்திரங்களுடன் ஓடி அலைந்து தானும் இயந்திரமாகவே மாறிக் களைத்து வருகிறான் மனிதன். விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையில் விந்தைகள் செய்துகொண்டிருக்கிறது விஞ்ஞானம். இந்நிலையில் அன்னையருக்காக ஒருதினத்தை ஒதுக்குவதென்பது சிரமமான காரியமே. கீழைத்தேய நாடுகளில் தாயைப் பிரிந்துவாழாத நிலையே பொதுவாகக் காணப்படுவதால் அன்னையர் தினம் பற்றிப் பெரிதாக சிந்திப்பதில்லை. ஆனால் எமது நாட்டினை எடுத்து கொண்டால். அநாதை இல்லம், முதியோர் இல்லம் என்று பெருகிய வண்ணமே உள்ளது. அங்கு தாய்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது.
பிள்ளைகளால் வெறுக்க பட்ட தாய்கள், பிள்ளைகள் வெளிநாட்டில் உள்ள தாய்கள், பிள்ளைகளே இல்லாத தாய்கள், என எல்லோரும் அங்கு தான் தஞ்சம் புகுகின்றார்கள். காரணம் பிள்ளைகள் தான். நாகரிக வளர்ச்சி, கெளரவம், மூன்றாம் நபர் ஒருவரின் பேச்சினை கேட்டு, சுயநலம், போன்றன பலவுள் சிலவாகும். எனினும் எம்மை இவ்வுலகுக்கு ஈன்றெடுத்த தாய்க்காக அந்த அன்பை உணர்வதற்காக ஒருநாளை பிரத்தியேகப்படுத்துவதில் தவறில்லை என்றே கூற முடியும். பெண்ணின் அதியுயர் நிலையாக மதிப்பிடப்படும் தாய்மையின் மகத்துவத்தை அறிந்து அன்பான அந்த உறவுக்காக அன்பைப் பகிர்வோம். இன் நாளில் ஆவது அந்த அன்பை முழுமையாக அடைந்து. முதியோர் இல்ல எண்ணிக்கைகளை குறைப்போம்.
பிள்ளைகளே நீங்கள் இருக்கும் வரை அவர்கள் ஆனதை இல்லை. ஆனால் நீங்கள் அவர்களை ஏன் அங்கெ விடுகின்றீர்கள். உங்கள் கூடவே வைத்திருங்கள். தாய் அன்பு வேண்டும் பிள்ளைகளே, முதியோர் இல்லத்தில் அவர்களை தத்து எடுங்கள். சந்தோசமாக வாழுங்கள். உலகம் முழுவதுமே ஒவ்வொரு மனிதனின் உயிரணுக்கள் எல்லாம் உச்சரிக்கும் சொல் அம்மா. பிறக்கின்ற குழந்தை ஆணோ, பெண்ணோ அவர்களை அனைத்துமாக ஆக்கி கொண்டாடி வளர்த்தெடுப்பவள் அன்னை தான். உலகில் இன்று வணிக காரணங்களுக்காக ஒவ்வொரு வருடமும் தினந்தோறும் ஏதாவது ஒரு தினத்தை கொண்டாடிக் கொண்டு வருகின்றோம் என்றாலும், ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 2வது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படும் அன்னையர் தினம் சிறப்பு வாய்ந்தது.
ஏனெனில், கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து போய்விட்ட இந்த காலத்தில், வாட்ஸ் அப் வழியாகவே பலரும் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொள்கின்றனர். அப்படி பேஸ்புக் ஸ்டேட்டஸில் போடுவதற்காக மட்டும் அன்னையர் தினத்தைக் கொண்டாடாமல் நிஜமாகவே இன்று ஒரு நாள் மட்டுமாவது உங்களை வளர்த்தெடுத்த அன்னையுடன் அன்போடு சில வார்த்தைகளாவது அமர்ந்து பேசி மகிழச் செய்யுங்கள். அன்பு, பரிவு, பற்று, தாராளம், ஈகை என நல்ல குணங்களின் அடையாளமான தாயை போற்ற ஒருநாள் மட்டுமல்ல ஏழெட்டு பிறப்புகள் எடுத்தாலும் போதாது. அதனால் இந்த அன்னையர் தினத்தில் அம்மாவை உணர்வோம், ஒவ்வொரு நாளும் கொண்டாடுவோம்.
அன்னையர் தினத்தை உலகம் கொண்டாடுவதற்கு முன்பே நமது முன்னோர்கள் நாட்டினையே தாய்நாடு என்றும், மொழியை தாய்மொழி என்றும், மாதா, பிதா, குரு, தெய்வம் என்றும் பெருமைபடுத்தி உள்ளனர். அன்னையின் சிறப்பைக் கூற, அவளைக் கொண்டாட ஒரு நாள் போதாது. ஒரு குழந்தை பிறப்பது ஒரு தாய் மூலமே. ஆயிரம் உறவுகள் இருந்தாலும் அத்தனை உறவுகளினதும் ஆத்மார்த்தமான அன்பை ஒருமிக்கச் செய்து அன்பின் உச்சநிலையைக் காட்டுவது தாயன்பு மட்டுமே. சுயநலம் பாராத, தன் நலம் கருதாத ஒரு உயிர் அம்மா மட்டுமே. ஒரு பெண் கருவைச் சுமக்க ஆரம்பித்தவுடன் உடலாலும் மனதாலும் மிகப்பெரிய மாறுதல்களைச் சந்திக்க ஆரம்பிக்கிறாள். தாய்மை என்றும் ஒரு வரமே. பெண் என்பவள் இரு முறை பிறக்கிறாள் என்பார்கள். அதாவது அவளது தாய், தந்தைக்கு மகளாக பிறக்கும் போது ஒரு முறையும், அவளது வயிற்றில் குழந்தையை சுமந்து பிரசவிக்கும்போது மறுஜென்மம் எடுக்கிறாள்.
ஒன்பது மாதங்கள் கருவைச் சுமந்து பத்தாவது மாதம் குழந்தைபேறின் போது மறுஜென்மம் எடுக்கிறாள். ஏனெனில் பிரசவ வலி என்பது உலகில் உள்ள அத்தனை வலிகளிலும் அதிகமானது. பிரசவம் என்பது பெண்ணுக்கு தாள முடியாத வலியை கொடுக்கும் என்றாலும் அவை அனைத்தையும் தாங்கி கொண்டு குழந்தையின் அழுகுரல் கேட்டவுடன் அதை மறந்து விடுகிறாள். குழந்தை பிறந்தபின் அக்குழந்தைக்காக பசி, தூக்கம் மறந்து அதனைக் கண்ணும் கருத்துமாக வளர்க்கிறாள். எத்தனையோ அறிவியல் வளர்ச்சி அடைந்துள்ள இக்காலத்திலும் குழந்தை வளர்ப்பதற்காக தன் வேலை, படிப்பை மறந்து குழந்தையே கதியாக இருக்கும் எண்ணற்ற இளந்தாய்மார்கள் இன்றும் இருக்கிறார்கள்.
குழந்தையை வயிற்றில் சுமக்கும் போதும், குழந்தை பிறந்தபின்பும் குழந்தைக்காக சரிவிகித உணவு எடுத்துக் கொள்ளும் தாய் குழந்தை வளர்ந்தபின் தங்கள் உடல்நலம், உணவில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. இதனால் இளவயதிலேயே மூட்டுவலி, உடல் பருமன் மற்றும் பல நோய்களால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். இதனைத் தவிர்க்க அன்னையர்களும் இன்றைய காலகட்டத்தில் தங்கள் உடல்நலத்தில் சற்று சுயநலத்துடனும், அக்கறையுடனும் இருத்தல் நல்லது என்றே தோன்றுகிறது. ஏனெனில் காலம்காலமாக தாயைத் தியாகத்தின் மறுஉருவம் என்று சொல்லி அவள் தன்னைப்பற்றி நினைப்பதையே தவறு என்று உருவாக்கி விட்டோம். அவ்வாறு இல்லாமல் தற்காத்து தற்கொண்டானைப்பேணி என்ற வள்ளுவனின் வாய்மொழிக்கிணங்க தன் நலத்திலும் சிறிது அக்கறை எடுத்துக் கொள்வதுடன் தன் குழந்தை, குடும்ப உறுப்பினர்கள் நலத்திலும் கவனம் எடுத்துக் கொள்ளுதல் அவசியம்.
அதனைப் போன்று குடும்ப உறுப்பினர்களும் அன்னையர் தின வாழ்த்துக்கள் மட்டும் சொல்லிகடந்து விடாமல் இன்றிலிருந்தாவது தாயிடம் மனம் விட்டு பேசுவதுடன் அவள் மனதில் என்ன நினைக்கிறாள் என்று அவள் கருத்தையும் கேட்டு அவளையும் சகமனுஷியாக மதிக்க வேண்டும். அவள்தான் குடும்பத்தின் ஆணி வேர் என்பதை உணர்ந்து நடந்து கொள்வதே அவளுக்கு நாம் தரும் சிறந்த அன்னையர் தின பரிசாகும். நீங்கள் உங்கள் தாயை பார்க்கும் பொழுது, உலகிலேயே உள்ள தூய்மையான நேசத்தையும் காதலையும் பார்க்கிறீர்கள் எனச் சார்லி பென்னடோ கூறுவார். அவர் கூறிய வார்த்தைகளில் அவ்வளவு உண்மை அடங்கி இருக்கிறது.
இவ்வுலகில் நாம் எந்த ஒரு காலக் கட்டத்திலும் சரி எத்தனை மனிதர்களைச் சந்தித்து இருந்தாலும் சரி நம் தாய் அளவிற்கு நம்மை யாரும் நேசித்திருக்க முடியாது. எந்த குழந்தையும், நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே, பின்பு, நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே’ என்ற பாடல் வரிக்கு ஏற்ப, சமுதாயத்துக்கு நல்ல மனிதர்களை உருவாக்கி வழங்குவது அன்னை தான். அனைவருக்கும் இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள். தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









