தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 21.04.2025 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல் கிஷோர், தகுதி வாய்ந்த மனுக்கள் மீது விரைந்து விசாரணை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு அனைத்து துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தினார்.
தென்காசி மாவட்ட கூட்டுறவுத் துறையின் சார்பில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை பல்நோக்கு சேவை மையங்களாக மாற்றும் திட்டத்தின் கீழ் மேலகரம், மத்தளம் பாறை மற்றும் புளியங்குடி மேற்கு ஆகிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் பொது விநியோகத் திட்ட நகர்வு பணி பயன்பாட்டிற்கு தலா ரூ.27.00 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.81.00 இலட்சம் மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்பட்ட மூன்று சரக்கு வாகனங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.


மேலும், இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித் தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக் கோருதல், பட்டா மாறுதல், மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 985 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனு தாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து துறை அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சீ.ஜெயச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அந்தோணி பெர்ணான்டோ, சங்கரன் கோவில் வருவாய் கோட்டாட்சியர் கவிதா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முத்துராமலிங்கம், தென்காசி மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர் கு.நரசிம்மன், துணைப் பதிவாளர்கள் பா.பூர்விசா, ப.கோபிநாத், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சுப்புலெட்சுமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) செல்வக்குமார், துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) நம்பிராயர் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்