பாராளுமன்ற தேர்தலோடு எதிர்க்கட்சிகள் காணாமல் போய் விடும்- செல்லூர்ராஜூ பேச்சு..

வருகிற பாராளுமன்ற தேர்தலோடு எதிர்க்கட்சிகள் தமிழ்நாட்டில் காணாமல் போய் விடும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியுள்ளார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது. கூட்டத்துக்கு நீதிபதி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். அமைச்சர் செல்லூர்ராஜூ ஆலோசனைகள் வழங்கி பேசினார். அவர் பேசியதாவது:- வருகிற பாராளுமன்ற தேர்தலை சந்திக்க அ.தி.மு.க. அமைத்துள்ள கூட்டணி வெற்றி கூட்டணி. இதனை எதிர்க்கட்சிகள் பார்த்து அச்சம் கொள்கிறது. இன்னும் சில கட்சிகள் நம் அணிக்கு வர உள்ளது. நாம்தான் மெகா கூட்டணி அமைத்துள்ளோம்.

மக்களும் நம்மை ஆதரிக்கிறார்கள். எனவே வெற்றியுடன் பிறந்த இயக்கம் அ.தி.மு.க.வுக்கு இனி ஒருபோதும் தோல்வி கிடையாது. முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டணி அமைப்பதில் அம்மாவின் செயல்பாட்டை காண்பித்து விட்டனர். இதனால் எதிர்க்கட்சிகளுக்கு இப்போதே தோல்வி பயம் வந்து விட்டது. நாம் அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும். அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றிபெற உழைக்க வேண்டும். நமது தேர்தல் பணி மூலம் வருகிற பாராளுமன்ற தேர்தலோடு எதிர்க்கட்சிகள் தமிழ்நாட்டில் காணாமல் போக வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ராஜன் செல்லப்பா பேசியதாவது:-மு.க.ஸ்டாலின் எப்படியாவது பொய்யை கூறி இந்த அரசை வீழ்த்தி விடலாம் என்று கனவு காண்கிறார். அவரது கனவு நிறைவேறாது. முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் அம்மாவின் ஆட்சியை, கட்சியை சிறப்பாக வழி நடத்தி வருகிறார்கள். எனவே அம்மாவின் இலட்சிய பணி இன்னும் 100 ஆண்டுகள் தமிழக மக்களுக்கு அ.தி.மு.க. நிரந்தர சேவை செய்யும்.

அந்த வகையில் தான் பாராளுமன்ற தேர்தல் கூட்டணி அமைந்துள்ளது. அ.தி.மு.க. நம்பி வந்தவர்களை வாழ வைக்கும் இயக்கம். இந்த இயக்கம் நம்பியவர்களை கைவிட்டது இல்லை. ம.தி.மு.க., தே.மு. தி.க., பா.ம.க. போன்ற கட்சிகளுக்கு அங்கீகாரம் பெற்று தந்தவர் ஜெயலலிதா. அதனை மறந்து விடக்கூடாது.

எனவே அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்து கூறி கழக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிக்கு நாம் அனைவரும் ஒன்று பட்டு உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் தேனி மாவட்ட செயலாளர் சையது கான், மதுரை புறநகர் இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ், தேனி மாவட்ட பேரவை செயலாளர் ரவீந்திரநாத் குமார், நிலையூர் முருகன், எம்.ஜி.ஆர்.மன்ற துணைத் தலைவர் விரகனூர் ஜெயச்சந்திரன், நிர்வாகிகள் தவசி, பூமாராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கீழை நியூஸுக்காக மதுரை நிருபர் கனகராஜ்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!