சோழவந்தான் அருகே தென்கரை அகிலாண்டேஸ்வரி அம்மன் சமேத மூலநாத சுவாமி கோவிலில் உள்ள வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சூரசம்ஹார விழா நடந்தது.இவ்விழாவை முன்னிட்டு கடந்த 22 தேதிஅன்று கணபதி ஹோமத்துடன் கந்த சஷ்டி விழா தொடங்கியது. அன்று பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர். தினசரி சுப்ரமணிய சுவாமிக்கு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. நேற்றைய முன் தினம்மாலை 4 மணி அளவில் அன்னை பராசக்தியிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நேற்று மாலை 5 மணி அளவில் கோவில் முன்பாக சூரசம்ஹார விழா நடைபெற்றது. பக்தர்கள் வெள்ளத்தில் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.அங்கு கூடியிருந்த பக்தர்கள் வெற்றிவேல்முருகா,வீரவேல்முருகா என்று பக்தி கோஷமிட்டனர். இதைத் தொடர்ந்து கோவில் முன்பாக உள்ள விநாயகர் மண்டபத்தில் முருகப்பெருமானுக்கு 21 திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பரசுராமன் என்ற கண்ணன் பூஜைகள் செய்து பிரசாதம் வழங்கினார். அன்னதானம் வழங்கினர். விழா ஏற்பாடுகளை பிரதோசம் கமிட்டி செய்திருந்தனர். கோவில் செயல் அலுவலர் கார்த்திகைச்செல்வி, பணியாளர்கள் நாகராஜன்,மணி, நித்யா, ஜனார்த்தனன், பிரதோசம் கமிட்டியினர் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.காடுபட்டி சப் இன்ஸ்பெக்டர்கள் கணேஷ்குமார், ரகு மற்றும் போலீஸார் பாதுகாப்பு செய்திருந்தனர். தென்கரை ஊராட்சி சார்பாக கூடுதலான சுகாதார பணி, கூடுதலான திருவிளக்கு, குடிநீர் வசதி ஏற்பாடு செய்திருந்தனர்.இதேபோல் திருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோவிலிலும் சூரசம்ஹார விழா, தச்சம்பத்து ஆறுமுகம் முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா நடைபெற்றது.

