மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்,ஜி எஸ் டி கவுன்சில் கூட்டம் மற்றும் நிதி நிலை குறித்த ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கடந்த ஒரு வார காலம் சென்னையில் இருந்தேன்.அப்போது மதுரையில் அமைச்சர் மூர்த்தி தொடர் கண்காணிப்பில் மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு இருந்தார்.நாங்கள் ஆட்சி பொறுப்பேற்று மூன்று வாரங்கள் ஆகிறது.எங்கள் தலைவரும் முதல்வருமான முக ஸ்டாலின் அவர்கள் தெளிவான ஒரு கட்டளையையிட்டு கொரோனா கட்டுப்பாட்டில் அனைவரும் கவனம் செலுத்தும் படி அறிவுறுத்தினார் .அதன் அடிப்படையில் பதவி ஏற்பு முடிந்து மதுரைக்கு வந்த முதல் நாளில் இருந்து நானும் அமைச்சர் மூர்த்தியும் இந்த பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்.அன்றே சித்த மருத்துவ வசதிகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையங்கள் உள்ளிட்டவற்றை திறந்து வைத்தோம்.இன்றைக்கு மதுரையில் மூன்று வாரத்திற்கு முன்னர் இருந்த சூழல் மிகவும் சிறப்பாக மாறி முன்னேற்றம் அடைந்துள்ளது.ஒரு காலத்தில் படுக்கை வசதிகள் இல்லை,ஐ சி யு படுக்கை பற்றாக்குறை ,ஆக்சிஜன் பற்றாக்குறை என எல்லாவகையிலும் பிரச்னை இருந்தது.கண்காணிப்பு அலுவலர் சந்திர மோகன் மற்றும் மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் ஆகிய இரு ஐ ஏ எஸ் அதிகாரிகளும் மருத்துவர்கள்.மதுரையை நன்கு அறிந்தவர்கள் .அதே போல் மாநகராட்சி ஆணையர் விசாகன் அமைச்சர் மூர்த்தி மற்றும் என்னுடைய அறிவுரைகளை ஏற்று விஞ்ஞான முறையில் நடவடிக்கை எடுத்ததால் குறுகிய காலத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது .இன்றைக்கு இருக்க கூடிய சூழ்நிலையில் படுக்கை வசதி ,ஆக்சிஜன் வசதி ,அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் குறைகள் இல்லாத நிலையை உருவாக்கி இருக்கிறோம்.மத்திய அரசின் உத்தரவில்லாமல் கொண்டு வர இயலாத கருப்பு பூஞ்சைக்கான மருந்து மற்றும் தடுப்பூசி மட்டும் தேவையான அளவு இல்லையே தவிர மற்ற அனைத்து வகையிலும் கட்டுப்பாட்டில் வந்துள்ளது.விஞ்ஞான பூர்வமான அணுகுமுறையே இதற்கு காரணம் .தகவல்களை திரட்டி செயல்பட்டதோடு மட்டுமல்லாமல் ,வெளி மாநிலங்களில் இருந்து ஆக்ஜிசன் கொண்டு வருவதற்கு துரித நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. திட்டமிட்டு படுக்கை எண்ணிக்கைகள் அதிகரிக்கப்பட்டு உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டது.இது மட்டுமல்லாமல் ஒரு நிபுணர் குழுவை உருவாக்கி அவர்களின் அறிவுரைகள் கேட்டு படிப்படியாக பணிகள் மேற்கொண்டோம்.மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் கட்டளை அறை ஏற்படுத்தப்பட்டு காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.இதனை தாண்டி கிராமங்கள் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் உள்ளிட்ட பணிகள் பகிர்ந்து அளிக்கப்பட்டு ஆங்காங்கு நடைபெற்ற செயல்பாடுகளால் மருத்துவ சேவை அனைவருக்கும் கிடைத்திட வழி வகை செய்யப்பட்டது.கூடுதல் மருத்துவர்கள் 3500 ற்கும் மேற்பட்ட கூடுதல் முன் கள பணியாளர்களை நியமனம் செய்து வீடுகள் தோறும் தேடி சென்று பரிசோதனைகள் மேற்கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி மருத்துவ சிகிச்சை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.இதன் மூலம் நாங்கள் அளித்த வாக்குறுதியை முதல்வரின் வழிகாட்டுதலில் காப்பாற்ற முடிந்துள்ளது.13 ஆம் தேதி இருந்த நிலையை மாற்றி புது புது இடங்களில் படுக்கை வசதிகளை ஏற்படுத்தி தோப்பூரில் மட்டும் 400 ஆக்சிஜன் படுக்கைகளை உருவாக்கினோம்.அரசு,அமைச்சர்கள் ,ஆட்சியர் உள்ளிட அனைவரும் ஒருங்கிணைந்து இந்த நிலையை எட்டி உள்ளோம்.தற்போதும் இந்த முழு ஊரடங்கை பொதுமக்கள் முறையாக பின்பற்றினால் இன்னும் சீக்கிரமாகவே இரண்டாவது அலையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாததால் இறப்பு விகிதம் அதிகரித்து இருப்பதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு குற்றம் சாட்டி உள்ளாரே?
மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் இதற்கான தகவல் இருந்தால் அளிக்கட்டும்.கொரோனா இறப்பை பொறுத்தவரை அதிமுக ஆட்சிக்கும் திமுக ஆட்சிக்கும் உள்ள அடிப்படை வித்யாசத்தை அரசியலுக்கு அப்பாற்பட்டு சொல்கிறேன்.இது குறித்து நான் வழக்கே தொடர்ந்துள்ளேன்.கடந்த ஜூலை ஆகஸ்டில் அவர்கள் கொரோனா இறப்பை 200 என கணக்கு காண்பித்தார்கள் .அன்றைக்கு இரண்டே இரண்டு மயானத்தில் 1400 பேருக்கு இறுதி சடங்கு நடந்தது .நான் அப்போதே தகவல் மற்றும் ஆதாரங்கள் அடிப்படையில் மறுப்பு தெரிவித்தேன்.வழக்கும் தொடர்ந்து அரசாங்கத்தை நீதிமன்றம் தட்டி கேட்டது.அத்திவாசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளதே ?
பொதுவாகவே இயல்பான ஊரடங்கு காலத்தில் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படும் அதில் எந்த அளவிற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளோம் என்பதை பார்க்க வேண்டும் .அமைச்சர் மூர்த்தி இதில் தனிக்கவனம் செலுத்தி அதிகாரிகளிடம் நாங்கள் ஆலோசனை நடத்தி பொருட்கள் வழங்குவதில் பற்றாக்குறையும் விலை ஏற்றமும் இல்லாதவகையில் நடவடிக்கை எடுத்தோம்.சில விஷயங்கள் தவறு நடந்த பிறகு தான் திருத்திட முடியும்.அந்த வகையில் தான் சமீபத்தில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனை மூலம் சிகிச்சை பெற்றவருக்கு 64000 ரூபாய் பணம் திரும்ப பெற்று தரப்பட்டுள்ள்ளது.இந்த தவறுகள் மறுபடியும் நடைபெறாத வகையில் அமைச்சர் தலைமையில் தனியார் மருத்துவமனைகளுக்கு ஆலோசனை கூட்டமும் நடத்தி உள்ளோம்.கண்காணிப்பாளர்களை நியமித்துள்ளோம் .இத்தனையும் தாண்டி தனிப்பட்ட முறையில் தவறுகள் நடந்தால் எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.தடுப்பூசி தட்டுப்பாடுகள் குறித்து ?
தமிழ் நாட்டிலேயே தொழிற்சாலைகளுக்கு அதிக அளவில் தடுப்பூசி கிடைத்தது மதுரை மாவட்டத்தில் தான்.இங்கு கட்சி பாகுபாடு இல்லாமல் அனைத்து சட்டமன்ற தொகுதிகளில் உள்ள தொழிற்சாலை பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு உள்ளது .அரசியல் பாகுபாடு இல்லாமல் தடுப்பூசி செலுத்தும் பணிகளில் மதுரை மாவட்டம் சிறப்பாக செயல்பட்டுள்ளது.மாநில அளவில் நமக்கு தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டதற்கு காரணம் மத்திய அரசு சொல்கிறது மருந்துகளை மாநில அரசு வாங்கிட கூடாது என்கிறது .ஆனால் தடுப்பு ஊசிகளை வாங்கி கொள்ளுங்கள் என்பது எப்படி நியாயமாக இருக்கும்.உலக அளவில் தடுப்பூசி குறைபாடு இருக்கிறது .எடுத்துக்காட்டாக அமெரிக்காவில் 8 கோடி தடுப்பு ஊசிகள் கூடுதலாக வைத்து உள்ளார்கள் .அதனை தமிழ்நாட்டின் அனைவரும் சேர்ந்து தமிழகத்திற்கு கொண்டு வரும் முயற்சியில் நானும் பங்கெடுத்தேன்.நாட்டின் அளவில் உலகத்தியிலேயே அதிக உற்பத்தி மருத்துவ துறையில் வைத்துள்ள இந்தியாவில் தடுப்பூசி உற்பத்தியை ஊக்குவிக்காதது ஏன் என்ற கேள்வி எழுகிறது .திட்டமிடாமல் சில மாதங்களுக்கு ஏற்றுமதி ஏன் செய்தார்கள் ஒன்றிய அரசு என்பது மேலாண்மை குறையை தான் காட்டுகிறது.ஆனாலும் தமிழகத்திற்கும் மதுரைக்கும் கருப்பு பூஞ்சை மருந்து உள்ளிட்டவற்றை கொண்டு வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது .தடுப்பூசியை பொறுத்தவரையில் தொழில் துறை அமைச்சரை டெல்லிக்கு அனுப்பி செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி தொழிற்சாலையை குத்தகைக்கு எடுத்து தமிழ்நாடு அரசே தடுப்பூசி உற்பத்தியில் இறங்கலாம் என்ற ஏற்பாடும் இருக்கிறது .தொலை நோக்கு பார்வையோடு இதனை அணுகி தொழிலதிபர்கள் சி எஸ் ஆர் மூலம் 5000 முதல் 8000 லிட்டர் ஆக்ஜிசன் உற்பத்தியை இங்கு இருந்தே செய்திடும் திட்டமும் உள்ளது.அதே போல் தடுப்பூசி உற்பத்தியில் கவனம் செலுத்துவோம் இதனை பாடமாக எடுத்துக்கொண்டு தடுப்பூசி உற்பத்தியை கொண்டு வருவதற்கான அம்சங்கள் ஆளுநர் உரை மற்றும் பட்ஜெட்டில் இடம்பெறும்.மத்திய அரசுடன் இணக்கமாக இல்லாததால் மாநில அரசு திட்டங்களை பெற முடியவில்லையா ?
ஜனநாயக நாட்டில் மத்திய மாநில அரசின் இணக்கம் என்பதெல்லாம் தனி நபர் விருப்பம் அல்ல .இணக்கமாக இருந்துதான் செயல்பட வேண்டும் .மாநிலம் இல்லாமல் ஒன்றியம் இல்லை .அதனை விடுத்து அரசியல் செய்யவா ஒன்றிய அரசு இருக்கிறது என கேள்வி எழுப்பினார்.கொரோனா நோயாளிகளுக்கு மட்டுமல்லாமல் உடன் இருந்து கவனித்து கொள்பவர்களுக்கும் தரமான உணவு வழங்கப்படுகிறது இதில் ஏதேனும் குறை இருந்தாலும் எங்கு குறை உள்ளது என தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









