பொது விநியோகத் திட்டத்துக்கான பருப்பு, பாமாயில் கொள்முதல் டெண்டரை எதிர்த்த வழக்கு வாபஸ்பொது விநியோகத் திட்டத்திற்காக 20,000 மெட்ரிக் டன் பருப்பு மற்றும் 80 லட்சம் 1 லிட்டர் சமையல் எண்ணெய் கொள்முதல் செய்வதற்கான டெண்டருக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கை வாபஸ் பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கரூர் மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “தமிழ்நாடு உணவுப் பொருள் வாணிப கழகம் சார்பாக 2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பருப்பு, பாமாயில், சீனி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் பல வழங்கப்பட்டு வருகின்றன.தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பாக வழங்க கூடிய அத்தியாவசியப் பொருட்களுக்கான ஏலத்தில் கலந்து கொள்ள திறன், உள்கட்டமைப்பு, அனுபவம், ஆண்டு வருமானம் ஆகியவை அடிப்படையாக உள்ளது.
இதன்படி 2021 பிப்ரவரி 25ஆம் தேதி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் இயக்குனர் குழு சார்பாக கூட்டம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் கலந்து கொள்வதற்கு முந்தைய நிபந்தனைகள் கடைபிடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.தற்போது 2021 ஏப்ரல் 26-ஆம் தேதி 20,000 மெட்ரிக் டன் பருப்பு கொள்முதலுக்கான ஏல அறிவிப்பையும், 2021 மே 5ஆம் தேதி 80 லட்சம் லிட்டர் பாமாயிலுக்கான டெண்டர் அறிவிப்பும் தமிழக நுகர்பொருள் வாணிப கழகம் சார்பாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் முந்தைய நிபந்தனைகளை பின்பற்றாமல், தற்போது புதிய நிபந்தனைகள் வெளியிடப்பட்டுள்ளன. முந்தைய நிபந்தனைகள் படி, ஏலத்தில் கலந்து கொள்ளும் நிறுவனத்தின் கடைசி 3 ஆண்டு வருமானம் ரூ. 71 கோடியாக இருக்கவேண்டும். ஆனால் தற்போது வெளியாகியுள்ள நிபந்தனையில் கடைசி 3 ஆண்டுகளில் ரூ. 11 கோடி ஆண்டு வருமானம் இருந்தால் போதும் என்று உள்ளது மேலும் டெண்டர் அறிவிப்பாணையில் 14 விதிமுறைகள் உள்ளன. அவை முறையாக பின்பற்றப்படவில்லை. அதேபோல ஏலம் இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் இருந்தால் 30 நாட்கள் கால அவகாசம் வழங்க வேண்டும். ஆனால் இந்த டெண்டர் அவசர அவசரமாக 6 நாட்களுக்குள் முடிக்கப்பட்டுள்ளது.
எனவே, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பாக 20,000 மெட்ரிக் டன் பருப்பு மற்றும் 80 லட்சம் லிட்டர் பாமாயிலுக்காக வெளியிடப்பட்ட டெண்டர் அறிவிப்பிற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். மேலும் அதற்காம வெளியிடப்பட்ட அறிவிப்பை ரத்து செய்து, முந்தைய நிபந்தனைகளின் படி புதிய அறிவிப்பு வெளியிட உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என கூறியிருந்தார்.இந்த மனு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி அரசு தரப்பில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும், அதுவரை தமிழக அரசின் பருப்பு மற்றும் பாமாயிலுக்கான டெண்டருக்கு இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட்டிருந்தனர். இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பாக மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கை வாபஸ் பெறுவதாக மனுதாரர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









