மன்னார் வளைகுடா வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க மதுரைக் கிளை உத்தரவு!

மதுரை: மன்னார் வளைகுடாவை பாதுகாக்க பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் மீன்பிடி வலைகளை அகற்றும் வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.மதுரையைச் சேர்ந்த புஷ்பவனம் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.அந்த மனுவில், “மன்னார் வளைகுடா பகுதியில் ஒருங்கிணைந்த பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு அதற்கான வழிமுறையை 2018ஆம் ஆண்டு முதல் 2027 வரை பின்பற்ற திட்டமிடப்பட்டுள்ளது. மன்னார் வளைகுடா பகுதியில் ஏராளமான அரிய வகை மீன்கள், கடல் பறவைகள், அரியவகை கடல்வாழ் உயிரினங்கள், கடல் பாசிகள் நிறைந்துள்ளன. இப்பகுதியில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்களால் பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் தேவையற்ற பழைய மீன்பிடி வலைகள் கடலில் வீசப்படுகின்றன. இதனால் கடல் முழுவதும் மாசடைந்து கடல் வாழ் உயிரினங்கள் உயிரிழக்கும் அபாயம் ஏற்படுகிறது.சுமார் 6 முதல் 8 மில்லியன் டன் பிளாஸ்டிக் பொருள்கள் கடல் பகுதிகளில் உள்ளன. எனவே, மன்னார் வளைகுடா பகுதியில் ஒருங்கிணைக்கப்பட்ட திட்டத்தின்படி கடல் பகுதியை பாதுகாக்க பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் மீன்பிடி வலைகளை அகற்றி கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் கடல் பாசிகளை பாதுகாக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.இந்நிலையில், இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அமர்வில் இன்று (ஜனவரி 18) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, “மனு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை பிப்ரவரி 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!