மேலூர் சுங்கச்சாவடி அருகே நிகழ்ந்த விபத்தில், மதிமுக மாநில நிர்வாகிகள் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். பெண்கள் உட்பட இரண்டு பேர் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டு மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு திரும்பிய நிலையில் இந்த கோரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மதுரை காமராஜர்புரத்தைச் சேர்ந்தவர் பச்சைமுத்து, இவர் மதிமுக மாநில தொண்டரணி துணை அமைப்பாளராக உள்ளார். மேலும் இவரது சகோதரர் அமிர்தராஜ் மதுரை மாநகர் மாவட்ட தொண்டரணி நிர்வாகியாக உள்ளார். இந்நிலையில், சென்னையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பச்சைமுத்து, அவரது சகோதரர் அமிர்தராஜ், மதுரை மாநகர் இளைஞர் அணி துணை அமைப்பாளர் புலிசேகர், மற்றும் கட்சி நிர்வாகி பிரபாகரன் ஆகியோருடன் சென்று விட்டு மீண்டும் மதுரை திரும்பியுள்ளனர். வரும் வழியில், சென்னையில் உள்ள மகளின் வீட்டில் இருந்த பச்சைமுத்துவின் மனைவி வளர்மதியையும் காரில் அழைத்துக் கொண்டு திரும்பி உள்ளனர்.




இந்நிலையில், காரை அமிர்தராஜ் ஓட்டிவந்த வந்த நிலையில், மேலூர் சுங்கச்சாவடி அருகே கார் வந்து கொண்டிருக்கும் பொழுது, எதிர்பாராத விதமாக சாலையோரத்தில் முன்னாள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரில் பயணம் செய்த பச்சைமுத்து, அமிர்தராஜ், மற்றும் புலிசேகர் ஆகியோர் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், காரில் பயணம் செய்த பச்சைமுத்துவின் மனைவி வளர்மதி மற்றும் பிரபாகரன் ஆகியோர் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டு மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மேலூர் காவல்துறையினர். சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இச்சம்பவம் கட்சி நிர்வாகிகளிடம் பெறும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலூர் அரசு மருத்துவமனையில் இருந்து பலியான மூன்று பேர்களின் உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு வரப்பட்டு பின் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அஞ்சலி செலுத்துவதற்காக மதுரை வர இருப்பதாகவும் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.