அலங்காநல்லூர் அருகே புதிய பாலம் கட்டுமான பணி; வணிக வரித்துறை அமைச்சர் துவங்கி வைத்தார்..

மதுரை அலங்காநல்லூர் அருகே வலசை கிராமத்தில் 50 ஆண்டுகள் பழமையான பழுதடைந்த பாலத்திற்கு 2.5 கோடி மதிப்பில் புதிய பாலம் கட்டுவதற்கான கட்டுமான பணிகளை வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பேரூராட்சி 14வது வார்டு பகுதிக்கு உட்பட்ட வலசை கிராமத்திற்கு செல்லும் பழமையான சாத்தையார் ஓடை பாலம் கடந்த பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் சிதிலமடைந்த நிலையில் இருந்தது. இந்த நிலையில் போக்குவரத்திற்கு ஏதுவாக பாலத்தை இடித்து விரிவாக்கம் செய்ய வேண்டி இப்பகுதி மக்கள் கடந்த 50 ஆண்டுக்கு மேலாக போராடி வந்தனர்.

மேலும் தற்போதைய சட்மன்ற உறுப்பினர் வெங்கடேசன் கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது திமுக வேட்பாளராக வலசை பகுதிக்கு வாக்கு சேகரிக்க சென்ற போது இந்த கிராம பகுதி மக்கள் அனைவரும் எங்கள் கிராமத்திற்கு பஸ் வசதி இல்லாமல் பல ஆண்டுகளாக சிரமப்பட்டு வருவதாக தெரிவித்தனர். இதற்கு காரணம் தங்கள் கிராமத்திற்கு வரக்கூடிய பாதையில் சாத்தையார் ஓடையை கடக்க கூடிய பிரதான பாலம் மிகக் குறுகலாகவும் சிதிலமடைந்து இடிந்து விழக்கூடிய நிலையில் உள்ளதால் இந்த பாலத்தை சீரமைத்து விரிவாக்கம் செய்து புதிதாக பாலம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இதனை ஏற்று 2 கோடியே 5 லட்சம் மதிப்பிலான புதிய பாலம் கட்டுவதற்கு தற்பொழுது அரசு அனுமதி வழங்கியதை தொடர்ந்து, இன்று இதற்கான பூஜையை வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி பூமி பூஜைசெய்து தொடங்கி வைத்தார். இதில் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!