மதுரையில் டீ கடைக்காரரை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய கும்பல் கைது..

மதுரையில் டீ கடைக்காரரை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய கும்பல் கைது..

மதுரை மாநகர் கூடல்நகர் அருகேயுள்ள சொக்கலிங்க நகர் முதல் தெரு பகுதியில் வசித்துவருபவர் பழனிச்சாமி(வயது 59). இவர் அதே பகுதியில் டீக்கடை வைத்து நடத்திவருகிறார். மேலும் சிலருக்கு பைனான்ஸ் கொடுத்தும் வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அதிகாலை பழனிச்சாமி டீ கடையை திறக்க சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக காரில் காத்திருந்த சிலர் முகவரி விசாரிப்பதுபோல அருகே சென்று கண் இமைக்கும் நேரத்தில் பழனிச்சாமியை காரில் கடத்தி சென்றுள்ளனர்.

அப்போது பழனிச்சாமி கூச்சலிட்ட நிலையில் அவரது வீட்டிற்கு அருகில் உள்ளவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் பழனிச்சாமியின் குடும்பத்தினர் அங்கு வந்துள்ளனர்.

பின்னர் சிறிது நேரத்திலயே கடத்தல்காரர்கள் பழனிச்சாமியின் மகனின் செல்போனிற்கு தொடர்புகொண்டு பழனிசாமியின் இரு மகன்களிடம் 40 லட்சம் ரூபாய் கொடுத்தால் தான் உங்கள் தந்தையை விடுவோம் என கூறி மிரட்டி பணம் கேட்டுள்ளனர். இதனையடுத்து பழனிச்சாமியின் மகன்கள் கூடல்புதூர் காவல்நிலையத்தில் தந்தை கடத்தப்பட்டதாக புகார் அளித்தனர்.

தொடர்ந்து அடுத்தடுத்து பழனிசாமியின் மகன்களிடம் கடத்தல்காரர்கள் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அப்போது காவல்துறையினர் செல்போன் எண் டவரை பாலோ செய்து மதுரை மாவட்டம் குருவித்துறை அருகே இருப்பதாக தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அங்கு சென்ற தனிப்படை காவல்துறையினரை கண்டதும் கடத்தல்காரர்கள் பழனிச்சாமியை விட்டுவிட்டு தப்பித்து ஒடினர். இதனையடுத்து காவல்துறையினர் பழனிசாமியை மீட்ட நிலையில் தப்பியோடிய கடத்தல்காரர்களான தேனி மாவட்டம் மயிலாடும்பாறையைச் சேர்ந்த குணசேகர் , சுதாகர், மணிகண்டன் ஆகிய மூவரை கைது செய்த நிலையில் தப்பியோடிய மற்ற மூவரையும் தேடிவருகின்றனர்.

கைது செய்யப்பட்ட மூவரையும் காவல்நிலையத்திற்கு அழைத்துவந்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். பணத்திற்காக கடத்தப்பட்டாரா? முன்விரோதம் காரணமாக கடத்தப்பட்டாரா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடைபெற்றுவருகிறது. கைதான 3 பேரிடம் கூடல்புதூர் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!