தனிநபர் மற்றும் குழுக்களுக்கு கடனுதவி..

தென்காசி மாவட்டத்தில் பிற்படுத்தப் பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினை சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்களுக்கு சிறு தொழில்கள் மற்றும் வியாபாரம், செய்ய தனிநபர் கடன் மற்றும் குழுகடன் திட்டங்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப் பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடனுதவி வழங்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.

 

இது பற்றிய செய்திக் குறிப்பில், பிற்படுத்தப் பட்டோர், மிகப் பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினை சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் தங்களது பொருளாதார முன்னேற்றத்திற்காக சாத்தியக் கூறுள்ள சிறு தொழில்கள் மற்றும் வியாபாரம், செய்ய தனிநபர் கடன் மற்றும் குழுகடன் திட்டங்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடனுதவி வழங்கப்படுகிறது. விண்ணப்பதாரர் பிற்படுத்தப்பட்டோர் மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவராக இருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3,00,000-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். விண்ணப்ப தாரார் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 60 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும்.

 

தனிநபர் கடன் திட்டத்தின் கீழ், சிறு வர்த்தகம் அல்லது வணிகம், விவசாயம் மற்றும் அதனைச் சார்ந்த தொழில்கள் கைவினை பொருட்கள் மற்றும் மரபு வழி சார்ந்த தொழில்கள் செய்வதற்கு அதிக பட்சமாக ரூ.25.00 இலட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி வகிதம் ரூ.1.25 இலட்சம் வரை 7% மற்றும் ரூ.1.25 இலட்சம் முதல் 15.00 இலட்சம் வரை 8%. கடனைத் திரும்ப செலுத்தும் காலம் 3 முதல் 5 ஆண்டுகள் வரை.

 

குழுக்கடன் திட்டத்தின் கீழ், சுய உதவிக்குழு உறுப்பினர்கள் சிறு தொழில் அல்லது வணிகம் செய்ய ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.1.25 இலட்சம் வரையும், குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.25.00 இலட்சம் வரையும் ஆண்டுக்கு 7% வட்டி விகிதத்தில் கடனுதவி வழங்கப்படுகிறது. கடனை திரும்ப செலுத்தும் காலம் 3 ஆண்டுகள். சுய உதவிக் குழுக்கள் துவங்கி ஆறு மாதங்கள் பூர்த்தியாகி இருக்க வேண்டும். திட்ட அலுவலரால் (மகளிர் திட்டம்) தரம் (Grading) செய்யப்பட்டிருக்க வேண்டும். ஒரு குழுவில் அதிக பட்சம் 20 உறுப்பினர்கள் அனுமதிக்கப்படுவர். இருபாலருக்கான சுய உதவிக்குழ உறுப்பினர்களுக்கும் இக்கடனுதவி வழங்கப்படுகிறது.

 

பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு ஒரு கறவை மாட்டிற்கு ரூ.60,000 வீதம் 2 கறவை மாடுகள் வாங்க அதிகபட்சம் ரூ.1,20,000 வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 7%. திரும்ப செலுத்தும் காலம் 3 ஆண்டுகள். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளிலும் கடன் விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம். மேலும், இக்கழக இணையதள முகவரியில் (WWW.tabcedco.tn.gov.in) பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

 

விண்ணப்ப தாரர்கள் கடன் விண்ணப்ப படிவங்ளை பூர்த்தி செய்து சாதி, வருமானம் மற்றும் பிறப்பிடச் சான்றிதழ், குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை மற்றும் வங்கி கோரும் ஆவண நகல்களுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் அலுவலகம் மற்றும் கூட்டுறவு வங்கிகளிலும் சமர்ப்பிக்க வேண்டும்.

 

எனவே, தென்காசி மாவட்டத்தில் வசிக்கும் பிற்படுத்தப் பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் கடன் விண்ணப்பங்களைப் பெற்று உரிய ஆவணங்களுடன் சமர்ப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.

 

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!