நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 14ஆம் தேதிக்குப் பிறகும் நீட்டிக்கும் திட்டம் இப்போதைக்கு இல்லை:- மத்திய அரசு அறிவிப்பு..

நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 14ஆம் தேதிக்குப் பிறகும் நீட்டிக்கும் திட்டம் இப்போதைக்கு இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மாவட்ட மற்றும் மாநில எல்லைகளை மூடி சீல்வைப்பதை கண்டிப்பாக பின்பற்றுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.கொரோனா பரவலை தடுப்பதற்காக, கடந்த 25ஆம் தேதி நள்ளிரவு முதல் நாடு தழுவிய ஊரடங்கு அமலில் உள்ளது. 21 நாட்களுக்கு, அதாவது ஏப்ரல் 14ஆம் தேதி வரை, ஊரடங்கு நீடிக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஆனால், ஊரடங்கு ஏப்ரல் 14ஆம் தேதிக்குப் பிறகும் தொடரும், 3 மாதங்கள் வரை நீடிக்கப்படலாம் என ஒரு சில ஆன்லைன் செய்தி நிறுவனங்கள் தகவல் வெளியிட்டன. இத்தகைய தகவல்கள் ஆச்சர்யம் அளிப்பதாக, மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவ்பா (Rajiv Gauba) கூறியுள்ளார். இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள அவர், அறிவிக்கப்பட்ட கால அளவை தாண்டி ஊரடங்கை நீட்டிக்கும் திட்டம் எதுவும் இப்போதைக்கு இல்லை என தெரிவித்துள்ளார்.

அண்டை நாடான நேபாளத்திலும் நேற்று முதல் ஒரு வாரத்திற்கு நாடு தழுவிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, இந்தியாவுடனான எல்லை மூடப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டை சேர்ந்த புலம் பெயர் தொழிலாளர்கள் இந்தியாவில் இருந்து தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். சொந்த ஊருக்கும் செல்ல முடியாமல், ஏற்கெனவே வேலைபார்த்த பகுதிகளுக்கும் திரும்ப முடியாமல், இந்திய-நேபாள எல்லையில் உள்ள தார்சுலா பகுதியில் அவர்கள் சிக்கியுள்ளனர்.

Recent News

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!