ராமநாதபுரம் மாவட்டம், ரெகுநாதபுரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, 10 ஆம் வகுப்பு மாணவி அ.பிருந்தா. வீர் கதா போட்டியில் தேசிய அளவில் தேர்வு செய்யப்பட்டு புது டில்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார்.
இந்திய பாதுகாப்பு துறை, கல்வித்துறை வீர் கதா போட்டி ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. இதில் முதல் இந்திய சுதந்திரப்போரில் பழங்குடியினரின் எழுச்சி, ராணி லட்சுமி பாய் உள்ளிட்ட விடுதலைப் போராட்ட வீரர்கள், விடுதலைக்குப் பின் வீரதீர செயல்களுக்கான விருது வென்றோர் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை மாணவர்கள் அறியச்செய்து அதன்மூலம் நாட்டுப்பற்று, குடிமை உணர்வை அவர்களிடம் வளர்க்கும் நோக்கில், ஓவியம், கவிதை, கட்டுரை, பல்லூடக விளக்கக் காட்சி போன்ற போட்டிகள் நடைபெறும்.
நடப்பாண்டு நடந்த போட்டியில் அனைத்து மாநிலம், யூனியன் பிரதேசங்களில் உள்ள 2.31 லட்சம் பள்ளிகளில் இருந்து 1.76 கோடி மாணவர் பங்கேற்றனர். இதில் 3-5, 6-8, 9-10, 11-12 வகுப்புகளில் ஒவ்வொரு பிரிவிலும் 25 மாணவர் என தேசிய அளவில் 100 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதில் ராமநாதபுரம் மாவட்டம், ரெகுநாதபுரம், அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி 10 ஆம் வகுப்பு மாணவி அ.பிருந்தா, 9-10 வகுப்பு பிரிவில் தேசிய அளவில் 25 பேரில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் பள்ளியின் நூலகப் பொறுப்பாளரான ஆசிரியை க.வளர்மதி வழிகாட்டல் படி’ராணி லட்சுமி பாய் என் கனவில் வந்தார். நம் நாட்டுக்கு நான் சேவை செய்ய வேண்டும் என்று அவர் விரும்பினார்’ என்ற தலைப்பில் கட்டுரை எழுதினார்.
மாணவி பிருந்தா, ரூ.10 ஆயிரம் பரிசு, புதுடெல்லி கர்தவ்ய பாதையில் நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பை சிறப்பு விருந்தினராக நேரில் காணும் வாய்ப்பு பெற்றுள்ளார். தமிழ்நாடு அளவில் தேர்வு செய்யப்பட்ட இருவரில் பிருந்தா அரசு பள்ளி மாணவி என்பது குறிப்பிடத்தக்கது. மாணவி பிருந்தா, வழிகாட்டிய ஆசிரியை வளர்மதி ஆகியோரை முதன்மைக் கல்வி அலுவலர் ஏ.சின்னராசு, தலைமை ஆசிரியை ச.யுனைசி ஆசிரியர்கள் பாராட்டினர்.
You must be logged in to post a comment.