தென்னிந்தியாவில் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை சாப்பிடும் உணவு இட்லி. சவுத் இந்தியன் ஃபுட் என்று வடநாட்டவர்கள் மனதில் இருப்பது இட்லியும் தோசையும்தான். ஆனால் இட்லி இந்தியாவில் தோன்றிய உணவு இல்லை. இந்தோனேஷியாதான் இட்லிக்கு பூர்வீகம். உலக சுகாதார அமைப்பு, அதிக உட்டச்சத்து கொண்ட உணவுகளில் இட்லியையும் சேர்த்துள்ளது. இட்லியில் புரதம், நார்சத்து, கார்போஹைட்ரேட் அனைத்தும் உள்ளது. இது வேகவைத்த உணவு என்பதாலும் சாப்பிடுபவர்களுக்கு ஆரோக்கியாமானதாக இருப்பதாலும் உலகம் முழுக்க பிரபலமான உணவாக இருக்கிறது.
மார்ச் 30-ஆம் தேதி உலக இட்லி தினம் கொண்டாடப்படுகிறது. கோவையை பூர்விகமாகக் கொண்ட இனியவன் என்பவர்தான் இந்த தினத்தை 2015ம் ஆண்டில் இருந்து கொண்டாடக் காரணமானவர். ’மல்லிப்பூ’ இட்லியின் நிறுவனரான இவர், இட்லி செய்வதில் கின்னஸ் சாதனை படைத்தவர். 124 கிலோவில் இட்லி செய்ததற்காக இவர் கின்னசில் இடம்பெற்றார். மேலும் 2000 வகையான இட்லிக்களை உருவாக்கியவர். இது குறித்து இனியவன் பேசுகையில், ‘சிறியவர் முதல் பெரியவர் வரை, அனைவருக்கும் ஏற்ற ஒரு பொதுவான உணவு இட்லிதான். தந்தையர் தினம், அன்னையர் தினம் என எல்லாவற்றுக்கும் ஒரு தினம் இருக்க, இட்லி குறித்தும் ஒரு தினம் இருக்க வேண்டும் என எண்ணினேன். இட்லிக்கென்று ஒருநாள் ஒதுக்கப்பட வேண்டும் என்று நினைத்தேன். அதன் நீட்சியே, மார்ச் 30, இட்லி தினமாக ஆனது’ என தினத்துக்கான காரணம் குறித்து விளக்குகிறார்.
நகைச்சுவையாக ஒரு செய்தியை தமிழர்கள் சொல்வதுண்டு. அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில், வகுப்பில் பேராசிரியர் பாடம் நடத்திக்கொண்டு இருந்தபோது மாணவர்களைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டுள்ளார். கேள்வி என்னவென்றால், திரவ நிலையில் உள்ள ஒரு பொருளை திடப் பொருளாக மாற்ற முடியுமா என்பது தான் அது. பேராசிரியரின் கேள்விக்கு பெரும்பாலான மாணவர்கள், இது சாத்தியமில்லாதது என்றே பதிலளித்தனர். ஆனால் நம் தமிழ்நாட்டு மாணவர் சளைக்காமல் நிச்சயம் முடியும் என்று பதில் கூறியுள்ளார். உடனே பேராசிரியர் அது எப்படி முடியும் என்று திரும்பவும் கேள்வி கேட்டார். உடனே தமிழ்நாட்டு மாணவர், இட்லி மாவு தான் அது என்றும், திரவ நிலையில் உள்ள இட்லி மாவை சில குறிப்பிட்ட நிமிடத்திற்கு வேக வைத்தால் அது தான் இட்லி என்றும் எங்கள் விருப்ப உணவு என்றும் பதிலளித்தார். பேராசிரியர், மாணவர்கள் அனைவரும் தமிழ்நாட்டு மாணவரின் பதிலைக் கேட்டு கைதட்டி பாராட்டு தெரிவித்தனர். இந்த சம்பவம் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.
ஆனால் இட்லி சாப்பிட்டால் மூளை சுறுசுறுப்பாக வேலை செய்யும். எந்த விதமான அசவுகரியமும் ஏற்படாது என்று மருத்துவர்களும் இட்லிக்கு வக்காலத்து வாங்குகின்றனர். கன்னடத்தில் வடராதனே இட்லி சுமார் 700 ஆண்டுகளாக இந்தியாவில் அறியப்பட்டு வந்த ஒரு உணவு பதார்த்தம் ஆகும். இட்லியின் பண்டையகால பெயர் இட்டரிக என்பதாகும். பழங்கால இந்திய இலக்கியங்களில் இட்லி பற்றிய முதல் குறிப்பு, கன்னட மொழியில், சிவகோட்டி ஆச்சாரியர் ‘வடராதனே’ என்னும் காவியத்தில் குறிப்பிட்டுள்ளார். 750 ஆண்டுகள் பழமையானது பண்டைய நூல்களில் குறிப்பிட்டுள்ள இட்லியின் செய்முறை வேறு, இப்போது தயாரிக்கும் இட்லியின் செய்முறை வேறு. நவீன முறை இட்லி, 1250ம் ஆண்டு பின் எழுதப்பட்ட நூல்களில் தான் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தோனேசியாவை ஆண்ட இந்து சமய அரசர்களின் நூல்களில் குறிப்பிட்டுள்ள செய்முறை தான் இப்போது பின்பற்றுவதாக, உணவு நிபுனர் அட்சயா தனது பதிப்பில் குறிப்பிட்டுள்ளார். உலக இட்லி தினம் எந்த நேரம் என்றில்லாமல் எந்த நேரமும் விரும்பி சாப்பிடலாம் என்ற காரணத்தினால் எல்லோரும் இட்லியை அரவணைத்துக்கொண்டனர்.
தற்போது பெரும்பாலும் இட்லி மாவை கடைகளில்தான் வாங்குகிறோம். கடைகளில் சோடா உப்பு சேர்ப்பதால், அவசரத்துக்கு மட்டும் வாங்கிக்கொண்டு வீட்டிலேயே அரைத்துக்கொள்வது நல்லது. மிருதுவான இட்லி செய்ய இட்லி அரிசியுடன் பச்சரிசியையும் சேர்த்தால் இட்லி சாஃப்ட்டாக இருக்கும். மூன்று கப் இட்லி அரிசி எடுத்தால் 2 கப் பச்சரிசி சேருங்கள். மொத்தம் ஐந்து கப் அரிசிக்கு ஒரு கப் முழு உளுந்து போட்டால் போதும். உங்களின் உளுந்து எவ்வளவு உபரி தருகிறதோ அதெற்கேற்பவும் அளவை மாற்றிக்கொள்ளலாம். இட்லி இரண்டையும் ஐந்து மணிநேரம் ஊறவைக்கவேண்டும். உளுந்துடன் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு வெந்தையத்தைம் சேர்த்துக்கொள்ளலாம். அனைத்தையும் ஐந்து மணிநேரம் தனித்தனியாக ஊறவைத்து, முதலில் உளுந்தை, வெந்தையத்துடன் அதிகம் தண்ணீர் ஊற்றாமல், தெளித்து மட்டும் அரைத்து கெட்டியாக வைத்துக்கொள்ளவும். அதன்பின் அரிசியை அரைத்து, அனைத்தையும் ஒன்றாகக் கலந்து, தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும். 8-9 மணிநேரம் ஃபிரிட்ஜில் வைக்காமல் வெளியே வைத்திருந்தால் புளித்துவிடும். பிறகு இட்லி சுட்டால் மிகவும் சுவையாகவும் சாப்ட்டாகவும் இட்லி இருக்கும். இட்லிகளிலும் பலவகைகளில் சமைக்க துவங்கி விட்டனர். பொடி இட்லி, கொத்து இட்லி, ரவா இட்லி, ஸ்டப்டு இட்லி, இட்லி ப்ரை, இட்லி சாட், இட்லி கபாப், என நீங்கள் நினைத்துக்கூட பார்க்காத வகையிலான ஏராளான வகை இட்லிகள் இன்று ஓட்டல்களில் விற்பனையாகிறது. மும்பை பல்கலைக்கழக பேராசிரியையான வைஷாலி பம்போல், எந்தவொரு ரசாயன முறையையும் பயன்படுத்தாமல், இட்லியை சுமார் மூன்று ஆண்டுகள் வரை கெடாமல் பார்த்துக்கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார். மும்பை பல்கலைக்கழக பேராசிரியை கூறியதாவது, 2013 ஆம் ஆண்டிலிருந்து தனது குழுவுடன் வைஷாலி இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருவதாகவும். எலக்ட்ரானிக் பீம் ரேடியேஷன் முறையைப் பயன்படுத்தி உணவுப் பொருட்களைக் கெட்டுப்போகாமல் பதப்படுத்த முடியும் என்று கண்டுபிடித்துள்ளோம், என்று கூறியுள்ளார்.
தமிழர்களின் பாரம்பரிய உணவான இட்லி அதிகம் விற்பனையாவது பெங்களூரு நகரில் தான். அதற்கு அடுத்தபடியாக மும்பையும் மூன்றாவது இடத்தில் சென்னையும் உள்ளது. அதற்கு அடுத்த இடங்களில் புனே மற்றும் ஐதராபாத் நகரங்கள் உள்ளன. குழந்தைகள், நோயாளிகள், முதியவர்கள் என எவருக்கும் பக்க விளைவு ஏற்படுத்தாத உணவு இட்லி தான். எளிதில் செரிமானம் ஆகும் என்ற காரணத்தாலேயே குழந்தைகளுக்கும் நோயாளிகளுக்கும் மருத்துவர்கள் பரிந்துறைக்கும் ஒரே உணவு இட்லி என்பது தமிழர்களுக்கு பெருமைதான். இட்லி தமிழ்நாட்டில் மட்டும் இல்லாமல் உலகின் எல்லா இடங்களிலும் மக்களால் அதிகம் விரும்பி சாப்பிடும் உணவாக மாறி வருகிறது.
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









