கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான புயல் சின்னம் செவ்வாய்க்கிழமை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இது, புதன்கிழமை (டிச.11) மேற்கு-வடமேற்கு திசையில் இலங்கை – தமிழக கடலோரப் பகுதியை நோக்கி மெதுவாக நகரும்.
இதன்காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் பல இடங்களில் அடுத்த 4 நாள்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை: நவ.11-ஆம் தேதி திருவள்ளூா் தொடங்கி ராமநாதபுரம் வரை உள்ள கடலோர மாவட்டங்கள், அதையொட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக கடலூா், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூா், திருவாரூா், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்றுமுதல் பெய்து வரும் கனமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று டிச. 11 மட்டும் விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் டிச.11, 12 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்தக் காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக உருவாகுவதற்கு சாதகமான சூழல் எதுவும் தற்போது இல்லை. தமிழகத்தில் கனமழை பெய்யுமே தவிர பொதுமக்கள் அச்சப்படும் அளவுக்கு காற்று, வெள்ள பாதிப்பு ஏற்படாது.
You must be logged in to post a comment.