பெஞ்சல் புயல் எதிரொலி! கேரளா செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு..

ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தால் கேரளாவில் வருகிற 4 ஆம் தேதி வரை கனமழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி சபரிமலை, பம்பை, நிலக்கல், எருமேலி ஆகிய இடங்களில் நேற்று கனமழை பெய்தது. சபரிமலையில் நேற்று காலை முதல் மழை பெய்த நிலையில் மதியம் பனிமூட்டமும் இருந்தது. மதியம் மழை சற்று ஓய்ந்தாலும், பிற்பகலில் மீண்டும் வலுத்தது. காலையில் குறைவாக பக்தர்கள் வந்த நிலையில் பிற்பகலில் கூட்டம் அதிகமாக இருந்தது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இனி வரும் நாட்களில் சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இன்றும் டிசம்பர் 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் சபரிமலை, பம்பை, எருமேலி ஆகிய இடங்களில் இடி மின்னலுடன் கன மழை பெய்யும் என்றும், 40 கி.மீ. வேகத்தில் காற்று வீசலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் பம்பா உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் ஆறுகளில் இறங்கவும், குளிக்கவும் தடை விதித்து பத்தனம்திட்டா மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். சபரிமலை உள்ளிட்ட சுற்றுவட்டாரப்பகுதிகளில் தொடர் கனமழையால் பம்பை ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!