வஃக்ப்-திருடர்களும்..! திருத்தங்களும்..!
(ஒரு சிறிய தொடர்)
வஃக்ப் புரிதல் -18
கே.ரஹ்மான்கான் கமிட்டியின் பரிந்துரையின் அடிப்படையில் 1995ஆம்ஆண்டு வஃக்ப் சட்டம், 2013 ஆம்ஆண்டு மாற்றி அமைக்கப்பட்டது.
இது கூட்டு நாடாளுமன்ற குழு (Joint parliamentary committee) மற்றும் மாநிலங்கள் அவையின் தேர்வுக்குழு ஆகியோரால் விவாதிக்கப்பட்டு அமலுக்கு வந்தது.
இந்த குழுவிற்கு பா.ஜ.க உறுப்பினர் தற்காலிக தலைவராக செயல்பட்டார்.
வஃக்ப் சட்டங்களில் தேவையான சில திருத்தங்கள் செய்து அமல்படுத்தப்பட்டபோது முஸ்லிம்கள் அதனை எதிர்க்கவில்லை. முஸ்லிம்களுக்கு அவைகள் எந்த பாதிப்புகளையும் ஏற்படுத்தவில்லை.
ஆனால் பா.ஜ.க அரசு இப்போது முன்னெடுத்து இருக்கிற இந்த வஃக்ப் சட்டத்திருத்தத்தை முஸ்லிம்கள் ஒட்டுமொத்தமாக எதிர்க்கிறார்கள்.
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வஃக்ப் சட்ட திருத்த மசோதா எதிர்கட்சி உறுப்பினர்களின் கடுமையான எதிர்ப்பால் நாடாளுமன்ற கூட்டுக் குழுவிற்கு ( Joint parliamentary committee) அனுப்பப்பட்டது.
JPC என்பது நாடாளுமன்ற மற்றும் ராஜ்ய சபா உறுப்பினர்கள் அடங்கிய குழுவாகும்.
இதில் நாடாளுமன்றத்தில் கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பிரதிநிதித்துவம் கொடுப்பது வழக்கமாகும்.
பல மசோதாக்கள் இந்த JPC க்கு அனுப்பப்படும் போது, குழுவினர், ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி துறைகளின் பல்வேறு ஆளுமைகளிடம் கருத்துக்கள் கேட்டு, இறுதியில் அது ஒரு அறிக்கையாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வார்கள்.
இதில் அனைத்து கட்சி உறுப்பினர்களும் இடம் பெற்று இருப்பதால் அறிக்கைகளை பெரும்பாலும் ஏற்றுக்கொண்டு சட்டமாக்கி விடுவார்கள்.
வஃக்ப் சட்டதிருத்த நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 21 பேரும், ராஜ்ய சபை உறுப்பினர்கள் 10 பேரும் மொத்தம் 31 பேர் இடம் பெற்றனர்.
நாடாளுமன்றத்தின் 21 உறுப்பினர்களில் 8 பேர் பா.ஜ.க உறுப்பினர்களும், 4 பேர் பா.ஜ.க கூட்டணி கட்சி உறுப்பினர்களும்,
ராஜ்ய சபாவில் இருந்து பா.ஜ.கவின் 4 உறுப்பினர்களும் சேர்த்து, மொத்தம் 31 பேரில் 16 உறுப்பினர்கள் பா.ஜ.க ஆதரவு நிலை உறுப்பினர்களும், மீதமுள்ளவர்கள் எதிர்கட்சி உறுப்பினர்களாகவும் இருந்தனர்.
பா.ஜ.க வின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகதாம்பிகா பால் இதன் தலைவராக நியமிக்கப்பட்டார்.
JPC பல கூட்டங்களை நடத்தி ஆலோசித்தது. இதில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த ஆ.ராசா,அசாதுதீன் உவைஸி, இம்ரான் மசூத், முஹம்மது ஜாவேத், மௌலானா முஹிபுல்லா நத்வி, தேஜஸ்வி சூர்யா என பல ஆளுமைகள் இருந்தாலும்,
பல கருத்துக்களை கூறினாலும், பலவற்றை ஏற்க மறுத்து பா.ஜ.க 16 உறுப்பினர்களின் பெரும்பாண்மை அடிப்படையில் 25 பரிந்துரைகளை நாடாளுமன்றத்திற்கு வழங்கியது.
இந்த அறிக்கையில் திருப்தி அடையாத எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து எதிர்ப்பை பதிவு செய்து வந்தாலும்,
இறுதியில் அந்த மசோதாவை 2025 ஏப்ரல் 2 ம்தேதி மக்களவையில் தாக்கல் செய்து நள்ளிரவு வரை நடந்த கடுமையான விவாதங்களையும் புறம் தள்ளி விட்டு மசோதாவை பெரும்பாண்மை அடிப்படையில் நிறைவேற்றினர்.
மசோதா 2025 ஏப்ரல் 4 ம்தேதி ராஜ்யசபாவிலும் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
ஒரு வேளை ராஜ்ய சபாவில் பின்னடைவு ஏற்பட்டு இருந்தாலும், நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் கூட்டி இதனை நிறைவேற்றி இருப்பார்கள்.
இவ்வளவு எதிர்ப்புக்கு இடையில் அந்த வரலாற்று பிழை நிகழ்ந்தது.
வஃக்ப்பின் பல பரிமாணங்களை தொடர்ந்து பேசுவோம்..!

வஃக்ப் சட்டத்திருத்த மசோதாவை பரிசீலித்து அறிக்கை தர அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக்குழு (JPC) உறுப்பினர்கள், மற்றும் அவர்களின் கட்சிகள், அவர்களின் செயல்பாடுகளை நாம் அறிந்து கொண்டால் JPC கொடுக்கும் அறிக்கை எப்படி இருக்கும் என்பதை புரிந்து கொள்ளலாம்.
பொதுவாக JPC யின் அறிக்கைகள் ஆளும் கட்சிக்கு சாதகமாகவே இருக்கும்.
நடக்கின்ற ஆய்வுக் கூட்டங்கள், ஆளுமைகளிடம் கருத்து கேட்புகள், கலந்துரையாடல்கள் எல்லாம் ஒரு கண்துடைப்புதான் என்றாலும்,
ஜனநாயக நாட்டில் இது ஒரு ஆரோக்கியமான நடைமுறையாகும். ஆலோசனைக் கூட்டங்களில் கூறப்படுகிற கருத்துக்கள், ஆவணங்களாக மாறும் வாய்ப்பு இருக்கிறது.
ஆகவே வஃக்ப் போன்ற முஸ்லிம்களின் மிக முக்கிய மசோதாவின் ஆய்வில் பங்குபெற்ற JPC உறுப்பினர்களின் கருத்துகள் மிக முக்கியமானதாகும்.
இதில் முஸ்லிம் உறுப்பினர்களும், முஸ்லிம் அல்லாத உறுப்பினர்களும், கலந்து இடம் பெற்றுள்ளனர்.
ஜெகதாம்பிகா பால், நிஷிகாந்த் துபே, தேஜஸ்வி சூர்யா, அப்ராஜிதா சாரங்கி, சஞ்சய் ஜெய்ஸ்வால், திலிப் சைக்கியா, அபிஜித் கங்கோபத்யா, D.K.அருணா, என்ற 8 பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினர்களும்,
கிருஷ்ண தேவரய்யா (தெலுங்கு தேசம்) திலேஷ்வர் காமெய்த் (நிதீஷ் குமார் JDU) நரேஷ் கண்பத் மாஷ்கே(சிவசேனா) அருண்பார்தி (LJP) போன்ற பா.ஜ.க கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 4 பேரும் என 12 பேரும்,
ராஜ்யசபாவின் பா.ஜ.க உறுப்பினர்கள் பிரிஜ்லால்,வேதா விஸ்ராம் குல்கர்னி, குலாம் அலி, ராதாமோகன் தாஸ் அகர்வால் ஆகிய 4 பேரும்,12+4 =16 உறுப்பினர்களும்,
ராஜ்ய சபாவின் நியமன உறுப்பினரான தர்மஸ்தலா விரேந்திர ஹெக்டேவையும் சேர்த்து மொத்தம் 17 உறுப்பினர்கள் பா.ஜ.க வின் நிலைப்பாட்டையும்,
ஏனைய எதிர்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கவ்ரவ் கோகாய், இம்ரான் மசூத் முஹம்மது ஜாவீத் ஆகிய காங்கிரஸ் உறுப்பினர்களும்,
முஹிபுல்லா(SP),ய கல்யாண் பானர்ஜி (TMC), ஆ.ராசா(DMK), அர்விந்த் சாவந் (சிவசேனா -உத்தவ்), சிரி மாஹித்ரேபல்ய மாமா சுரேஷ் கோபிநாத் (NCP-சரத்பவார்), அசாதுதீன் உவைஸி(AIMIM) ஆகிய 9 நாடாளுமன்ற உறுப்பினர்களும்,
சையது நாசர் ஹுசைன் (காங்கிரஸ்) முஹம்மது நதீமுல்ஹக்(TMC), விஜய் சாய் ரெட்டி (YSRCP), முஹம்மது அப்துல்லா (DMK), சஞ்சய் சிங்(ஆம் ஆத்மி)ஆகிய 5 உறுப்பினர்களும் சேர்த்து 14 எதிர்க்கட்சி உறுப்பினர்களுமாக JPC அமைந்துள்ளது.
JPC யின். தலைவராக பா.ஜ.க வின் ஜெகதாம்பிகா பால் நியமிக்கப்பட்டார்.
இதில் இடம்பெற்றுள்ள பா.ஜ.க வின் நிஷிகாந்த் துபே தேஜஸ்வி சூர்யா போன்ற தீவிர வலதுசாரி ஆதரவாளர்களும்,
அவர்களின் கருத்துக்களை ஒட்டி சமூக வலைதளங்களில் வஃக்ப் என்றால் என்ன என்றே தெரியாத பாசிச ஆதரவாளர்கள் பல ஆபத்தான கருத்துக்களை முன்வைக்கின்றனர்.
சமூக வலைதளத்தில் ஒரு பாசிசவாதி, வஃக்ப் என்று பேசி நேரத்தை வீணாக்காமல், எல்லா வஃக்ப் வாரியங்களையும் கலைத்து விட்டு எல்லா வஃக்ப் சொத்துக்களையும், அரசாங்கம் கையகப்படுத்த வேண்டும் என்கிறார்.
வஃக்ப் வாரியத்தின் சொத்துக்களின் நிலப்பரப்பு, பாகிஸ்தான் நாட்டைவிட பெரிது என்கிறார்.
மேலும் பல கோயில்களின் சொத்துக்களை வஃக்ப் என்று சொல்லி அபகரித்து இருக்கிறார்கள் என்கிறார்.
இதுபோன்ற பல பதிவுகள் மூலம் வஃக்ப் சொத்துக்கள் பற்றிய தவறான கருத்து உருவாக்கங்களை பாசிசவாதிகள் சமூக ஊடகங்களில் பரப்புகின்றனர்.
இவைகளையும் JPC கணக்கில் எடுத்துக் கொண்டு தனது அறிக்கையை 25 திருத்தங்களுடன் தாக்கல் செய்து இருக்கிறது என்ற சந்தேகத்தை அறிவுஜீவிகள் எழுப்புகின்றனர்.
JPC யின் எதிர்கட்சி உறுப்பினர்களின் எந்தக் கருத்துக்களையும், JPC ஏற்றுக் கொள்ளவில்லை என்று அதன் உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர்.
இதன் ஆபத்துகளை தொடர்ந்து கலந்து உரையாடுவோம்..!
வஃக்ப்பின் பல பரிமாணங்களை தொடர்ந்து பேசுவோம்..!
கவிஞர், கப்ளிசேட்!
You must be logged in to post a comment.