இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும், மெட்ரிக் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றங்களின் பொறுப்பாசிரியர்களுக்கு தொல் தமிழ் எழுத்துகள் பயிலரங்கம் மற்றும் தொல்பொருள் கண்காட்சி ராமநாதபுரம் முசமது சதக் தஸ்தகிர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
தொன்மை பாதுகாப்பு மன்றங்களின் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வே.ராஜகுரு வரவேற்றார். தொல்பொருள் கண்காட்சியை மண்டபம் மாவட்டக் கல்வி அலுவலர் க.பாலதண்டாயுதபாணி திறந்து வைத்தார். பேசும்போது, ் தொல்பொருள் பற்றிய ஆர்வத்தை பள்ளி மாணவர்களிடம் ஆசிரியர்கள் வளர்த்தால் கீழடி போன்ற பல தொல்லியல் களங்களை கண்டுபிடித்து தருவர். இக்கால பல பிரச்னைகளுக்கு நம் முன்னோர் பின்பற்றிய இயற்கை சார்ந்த பாரம்பரிய முறைகளில் தீர்வு உள்ளது. அவற்றை இம்மன்றம் மூலம் மாணவர்களிடம் எடுத்துச் செல்லவேண்டும் என்றார்.
தொல் தமிழ் எழுத்துகள் பயிலரங்கில் திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ் 1 மாணவி மு.விசாலி தமிழ் பிராமி எழுத்துகளையும், 9 ஆம் வகுப்பு மாணவி இரா.கோகிலா வட்டெழுத்துகள் தோன்றியவிதம், காலம், எழுத்துகளின் அமைப்பு, எழுதும் விதம் குறித்து ஆசியர்களுக்கு பயிற்சி அளித்தனர். வாலாந்தரவை அரசு உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் செ.இரவீந்திரன் தொகுத்து வழங்கினார். பனைக்குளம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் குமார் நன்றி கூறினார். 2000, 1000, 800, 300 ஆண்டு பழமை வாய்ந்த செங்கல் உள்ளிட்ட தொல்பொருள்களை அனைவரும் பார்வையிட்டனர்.

You must be logged in to post a comment.