கோபிச்செட்டிப்பாளையம் வாசுதேவன் உலோகநாதன் (Gobichettipalayam Vasudevan) ஏப்ரல் 8, 1954ல் ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம் வட்டத்திலுள்ள கரட்டடிப்பாளையத்தில் பிறந்தார். தமது இளங்கலைப் பொறியியல் படிப்பை கோயம்புத்தூரிலுள்ள சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டிருந்த பூ.சா.கோ. தொழில்நுட்பக் கல்லூரியில் 1976ல் முடித்தார். பின்னர் கான்பூரிலுள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் முதுநிலை பொறியியல் படிப்பை முடித்தார். மேற்படிப்பிற்காக ஐக்கிய அமெரிக்கா சென்ற உலோகநாதன் அங்கு பர்டியூ பல்கலைக்கழகத்தில் முனைவர்.ஜாக் டெல்லூர் வழிகாட்டுதலில் முனைவர் பட்டம் பெற்றார். முனைவர் பட்டத்திற்கான ஆய்வு நடுத்தர நகரங்களில் நீர்நிலை இடைமுகங்களுக்கான பன்னோக்கு திட்டமிடுதலைக் குறித்ததாக இருந்தது.
உலோகநாதன் டிசம்பர் 16, 1981ல் அன்று வர்ஜீனிய டெக்கில் தமது முதல் வேலையில் அமர்ந்தார். அமெரிக்க வர்ஜீனியா டெக் பல்கலைக்கழகத்தின் பொறியியல் கல்லூரியின் அங்கமாயிருந்த குடிசார் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் துறையில் பேராசிரியராகப் பணிபுரிந்து வந்தார். அவரது முனைவுகள் நீரியல் மற்றும் நீரழுத்த வலைப்பின்னல்களை குறித்தாயிருந்தது. அவர் கூட்டாக மற்றவர்களுடன் எழுதிய நூல்களும் வெளியீடுகளும் நகராட்சி நீர்வழங்கு பரவல் பிணைப்புகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தன. வர்ஜீனியா டெக் பல்கலையில் மிகச்சிறந்த ஆசிரியர் விருது, கற்பித்தலில் சீர்மைக்கான முதல்வர் விருது, குடிசார் பொறியியல் கல்வியில் சிறந்த ஆசிரிய மக்கள் விருது போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார். வர்ஜீனிய டெக் செனட்டில் உறுப்பினராகவும் வர்ஜீனியா டெக் பெருமை அறமன்றத்தில் அறிவுரையாளராகவும் இருந்துள்ளார்.
அமெரிக்க குடிசார் பொறியியலாளர்களின் சமூகத்தில் செயற்பாடுள்ள உறுப்பினராகத் திகழ்ந்தார். நீரியல் துறை வல்லுநராக நீர்வளப் பொறியியல் இதழுக்கு துணை ஆசிரியராக இருந்தார். பல்கலைக்கழகத்திலும் வளாகத்திலேயே அமைந்திருந்த தேசிய வானிலை சேவை அலுவலகத்துடனான ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றினார். வர்ஜீனியா டெக் வளாகத்திற்கருகேயே உலோகநாதன் தமது மனைவி உஷா, இரு மகள்கள், உமா, அபிராமியுடன் வாழ்ந்து வந்தார். நீரியல் மற்றும் நீரழுத்த பொறியியலாளர் கோ.வா. உலோகநாதன் வர்ஜீனியா ஏப்ரல் 16, 2007ல் தனது 53வது அகவையில் டெக்கில் 32 பேர் கொல்லப்பட்ட துப்பாக்கிப் படுகொலை நிகழ்வில் உயிரிழந்தவர்களில் இவரும் ஒருவர். லோகநாதன் நோரிஸ் ஹாலின் அறை 206ல் ஒரு மேம்பட்ட நீர்வளவியல் வகுப்பைக் கற்பித்தார். ஏப்ரல் 16, 2007 அன்று, சோ நோரிஸ் அறை 206 ல் நுழைந்தார். துப்பாக்கிப் சூட்டில் லோகநாதன் முதல் இலக்காக இருந்தார். லோகநாதனின் வகுப்பில் பதிவு செய்யப்பட்ட பதினைந்து மாணவர்களில், ஒன்பது பேர் கொல்லப்பட்டனர், மேலும் இருவர் காயமடைந்தனர். Source By: Wikipedia தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.


You must be logged in to post a comment.