பேராபத்தில் விவசாயம்; விவசாயிகளை காக்க துரை வைகோ எம்.பி வலியுறுத்தல்..

தென் மாவட்டங்கள், மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள மாவட்டங்கள் உள்ளிட்ட தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில், வறட்சி, பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் மழை வெள்ள பாதிப்பு, வேளாண் விளைப் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் காட்டுப் பன்றிகளின் பெரும் அட்டூழியத்தால் மொத்தமாக விவசாயம் முடிக்கப்பட்டு விடும் அபாயத்தில் உள்ளது. இந்நிலையில், விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை அழித்து வரும் காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி துரை வைகோ எம்.பி நாடாளுமன்றத்தில் பேசினார்.

அதன் விவரம் பின்வருமாறு, அவைத் தலைவர் அவர்களே, காட்டுப் பன்றிகளின் இனப்பெருக்கத்தால் விவசாயத்திற்கு ஏற்பட்டுள்ள பெரும் பாதிப்பை பற்றி இந்த சபையில் எடுத்துரைக்க விரும்புகிறேன். தமிழ்நாட்டில் 70% மாவட்டங்களில் இந்த காட்டுப்பன்றிகள் கட்டுக்கடங்காமல் இனப் பெருக்கம் செய்து கணக்கிலடங்காமல் பரவி உள்ளது விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு, சமீபத்தில் காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த சட்டம் இயற்றியுள்ளது. ஆனால் அந்தச் சட்டத்தை அமல்படுத்தி காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு வனத்துறையில் தேவையான நவீன ரக கருவிகள், ஆயுதங்கள், மனிதவளம், நிதி போன்ற போதிய வளங்கள் இல்லை. இதற்கு ஒரே தீர்வாக காட்டுப் பன்றிகளை Vermin ஆக பட்டியலிட்டு, எவ்வித சட்டக் கட்டுப்பாடும் இல்லாமல் யாரும் எப்படியும் காட்டுப் பன்றிகளை கொல்லலாம் என்ற அறிவிப்பை வெளியிட வேண்டும். அதற்கான அதிகாரம் மாநில அரசுக்கு கிடையாது.

 

இதனை கருத்தில் கொண்டு இந்த சபையில் நான் கேட்டுக் கொள்வதெல்லாம், ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் காட்டுப் பன்றிகளை Vermin ஆக பட்டியலிட்டு அறிவிப்பு வெளியிட்டால் காட்டுப் பன்றிகளை சட்டத்திற்கு உட்பட்டு யாரும் கொல்ல முடியும். அதனால் அதன் பெருக்கத்தை கட்டுப்படுத்த முடியும். எனவே மேற்குறிப்பிட்ட அறிவிப்பை வெளியிட ஒன்றிய அரசு சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்திற்கு வழிகாட்டுதல்கள் வழங்கி, விவசாயத்தையும் விவசாயிகளையும் காக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு துரை வைகோ எம்.பி பேசினார்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!