வங்கக்கடலில் நிலவியுள்ள டிட்வா புயலின் தாக்கத்தால் இன்றும், நாளையும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், குறிப்பாக புயல் தமிழகத்தை நெருங்கி வருவதால் இன்று இரவு முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையம் பிற்பகல் 1.30-க்கு வெளியிட்ட தகவலின்படி,
நேற்று (28-11-2025) இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய “டிட்வா” புயல் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (29-11-2025) காலை 08.30 மணியளவில், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு இலங்கை பகுதிகளில் நிலவுகிறது.
இலங்கை யாழ்ப்பாணத்திலிருந்து கிழக்கே சுமார் 80 கிலோ மீட்டர் தொலைவிலும், வேதாரண்யத்திலிருந்து தென்கிழக்கே 140 கிலோ மீட்டர் தொலைவிலும், காரைக்காலிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 170 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுவையிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 280 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து தெற்கே 380 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
இது, மேலும் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை (30-ஆம் தேதி) அதிகாலை, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடதமிழகம் – புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அருகே நிலவக்கூடும்.
“டிட்வா” புயல் வடக்கு-வடமேற்கு திசையில் நகரும் பொழுது, வடதமிழகம் புதுவை கடலோரப் பகுதிகளிலிருந்து, இன்று நள்ளிரவில் 60 கிலோ மீட்டர் தொலைவிலும், நாளை (30- 11-2025) அதிகாலை 50 கிலோ மீட்டர் தொலைவிலும், மாலை 25 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலவக்கூடும்.
இதன் காரணமாக இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
டெல்டா மற்றும் அதனை ஒட்டிய கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், பலத்த தரை காற்று மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
ஏனைய கடலோர மாவட்டங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
இன்று நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஒரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும்.
புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்,
வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை திருவள்ளூர் மற்றும் இராணிப்பேட்டை ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும்.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை மறுநாள் திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


You must be logged in to post a comment.