தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையினால் தமிழ்நாட்டிற்கு ஏற்படப்போகும் பேராபத்தைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற 63 அரசியல் கட்சிகள் அழைக்கப்பட்டிருந்த நிலையில் 58 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாகும்.இக்கூட்டத்தில் பங்கேற்றவர்களிடம் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையால் தமிழ்நாட்டிற்கு ஏற்படப்போகும் பேராபத்தை விளக்கமாக எடுத்துரைத்து, பவர்பாய்ண்ட் மூலம் தகவல்களை விளக்கி அனைத்துக் கட்சிகளின் ஒருமித்த ஆதரவைக் கோரினார். இதையடுத்து தொகுதி மறுசீரமைப்பிற்கு எதிரான தீர்மானத்திற்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு அளித்தனர். மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு எதிரான இந்த எதிர்ப்புக் குரல் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடையது மட்டுமல்ல; ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் உரிமைக்குரல் என்பது இன்று ஒன்றிய பாஜக அரசிற்கு உணர்த்தப்பட்டிருக்கிறது.இந்நிலையில், பாசிச சூழ்ச்சியை வீழ்த்துவோம் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூகவலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அதில், ”தமிழ்நாட்டின் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை குறைத்து நம் உரிமைகளைப் பறிக்கும் நோக்கில் நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை எனும் ஆபத்தை அமல்படுத்த ஒன்றிய அரசுத் துடிக்கிறது.தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாக்க கட்சி வேறுபாடுகள் கடந்து அனைவரும் ஓரணியில் நின்று பாசிச சூழ்ச்சியை வீழ்த்துவோம்” என தெரிவித்துள்ளார்.

You must be logged in to post a comment.