தலைநகர் டெல்லியை ஆட்சி செய்யப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.
70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டமன்றத்தின் தற்போதைய பதவிக்காலம் வரும் 23- ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இந்நிலையில், இதற்கான சட்டமன்ற தேர்தல் இன்று காலை 7 மணி அளவில் தொடங்கியது. ஒரே கட்டமாக நடைபெறும் இத்தேர்தலுக்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்ட இடங்களில் மத்திய துணை ராணுவப் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
70 தொகுதிகளிலும் மொத்தம் 699 பேர் போட்டி களத்தில் உள்ளன. மாலை 6.30 மணி வரை வாக்குப்பதிவை முன்னிட்டு டெல்லியில் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. இதற்காக, 30 ஆயிரம் டெல்லி போலீசார், 22 ஆயிரம் துணை ராணுவப்படையினர் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
நட்சத்திர வேட்பாளர்களான அர்விந்த் கெஜ்ரிவால், அதிஷி, மணிஷ் சிசோடியா, அல்கா லம்பா, ரமேஷ் பிதூரி ஆகியோர் போட்டியிடும் தொகுதிகள் கவனம் பெற்றுள்ளன. மேலும், டெல்லியை பொறுத்தவரை ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.
தேர்தலில் பதிவாகும் வாக்குகள், 8 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
You must be logged in to post a comment.