பாபரி மஸ்ஜித் இடிப்பு தினமான டிச.06 அன்று பாசிச எதிர்ப்பு தினம் என்ற பெயரில் தமிழகம் உள்பட நாடு முழுவதும் எஸ்டிபிஐ கட்சி சார்பாக பெருந்திரள் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதன் ஒருபகுதியாக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், எஸ்டிபிஐ கட்சியின் சென்னை வடக்கு மண்டல தலைவர் முகமது ரஷீத் தலைமையில் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சென்னை வடக்கு மண்டல செயலாளர் முகமது இஸ்மாயில், மத்திய சென்னை (வ) மாவட்ட தலைவர் ஜூனைத் அன்சாரி, மத்திய சென்னை தெற்கு மாவட்ட தலைவர் சலீப் ஜாஃபர், வட சென்னை (கி) மாவட்ட தலைவர் பூட்டோ மைதீன், வட சென்னை மேற்கு மாவட்ட தலைவர் சீனி முஹம்மது, திருவள்ளூர் (கி) மாவட்ட தலைவர் செய்யது அஹமது, திருவள்ளூர் (மே) மாவட்ட தலைவர் வழ.நஃபில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அபுபக்கர் சித்திக், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைமை நிலைய பேச்சாளர் மாரிமுத்து ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அபுபக்கர் சித்திக் பேசுகையில், மத்திய, மாநில அரசுகள், பாபரி மஸ்ஜித்துக்கு நிகழ்ந்த அநீதிபோல, இனியொரு வழிபாட்டுத் தலத்துக்கு நிகழ்ந்திடாதவாறும், சமூக நல்லிணக்கத்தை காக்கும் வகையில், வழிபாட்டுத் தலங்கள் சிறப்புச் சட்டம் (1991) செயல்பாட்டை உறுதிப்படுத்த வேண்டும் எனவும், சட்டத்தின் நீதியும், அமைதி நல்லிணக்கம் நிலைபெறவும், வழிபாட்டுத் தலங்கள் சட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்படும் வழக்குகளை கீழ்நீதிமன்றங்கள் விசாரிக்கவோ, வழிபாட்டுத் தலங்களை ஆய்வு செய்ய வேண்டும் என கீழ்நீதிமன்றங்கள் உத்தரவிடவோ உச்சநீதிமன்றம் தடை விதிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். இந்த பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

You must be logged in to post a comment.