கொரோனா பாதித்த பிரபல இருட்டுக்கடை உரிமையாளர் தற்கொலை?-நெல்லையில் பரபரப்பு..

நெல்லையில் அல்வாவிற்கு புகழ் பெற்ற இருட்டுக்கடை உரிமையாளர் கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து தற்கொலை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலியில் அமைந்துள்ள இருட்டுக்கடை அல்வாவிற்கு புகழ்பெற்றது. குறிப்பாக தென்னிந்திய சுற்றுலா பயணிகள் இங்கு அல்வா வாங்குவது வழக்கம். கடை ஆரம்பிக்கப்பட்ட நாளில் ஒரே ஒரு எண்ணெய் விளக்கு மட்டுமே இருந்திருக்கிறது. மாலை நேரத்தில் தான் இது திறக்கப்படுவது வழக்கம் என்பதால் இருட்டாக காணப்படும்.

கடை என்பதே காலப் போக்கில் மாறி ‘இருட்டுக் கடை’ என்றாகி விட்டது. இன்று வரை இதற்கென தனி பெயர் பலகை கூட இல்லை.

இந்த நிலையில் அல்வாவிற்கு புகழ்பெற்ற இருட்டுக்கடை உரிமையாளர் ஹரிசிங் இவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து, சமீபத்தில் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

கொரோனா அறிகுறி இருந்ததால் பரிசோதனை செய்யப்பட்டது. இதில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், மருத்துவமனையில் ஹரிசிங் இன்று தற்கொலை செய்துள்ளதாக தெரிகிறது. தனக்கு கொரோனா இருப்பது பற்றி தெரியவந்ததும், தற்கொலை செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!