மயிலாடுதுறை அருகே செம்பனார்கோவில் காவல் சரகத்திற்குட்பட்ட கிள்ளியூர் கிராமம் தச்சந்திடல் பகுதியை சேர்ந்தவர் விவசாயக் கூலி தொழிலாளி விஜயகுமார் (42). இவரது மனைவி மாரியம்மாள் (38) கிள்ளியூரில் ஊராட்சியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு பிளஸ் 2
படிக்கும் விஜயராகவன் (17), ஆறாம் வகுப்பு படிக்கும் விக்னேஷ் (12) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். மாரியம்மாளின் நடத்தையில் சந்தேகப்பட்டு விஜயகுமார் அடிக்கடி தகறாரில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்றிரவு மாரியம்மாள் தனது உறவினர் ஒருவருக்கு குழந்தை பிறந்துள்ளதால் அவரைப் பார்ப்பதற்காக கணவரிடம் தகவல் சொல்லாமல் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இதையடுத்து இரவு முழுவதும் காத்திருந்த விஜயகுமார் இன்று காலையில் மனைவியைத் தேடி அலைந்துள்ளார். அப்போது வீட்டிலிருந்து அரை கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்தபோது, நடுவாய்க்கால் என்ற இடத்தில் எதிரே நடந்து வந்த மனைவியை பார்த்த விஜயகுமார் ஆத்திரத்தில், கீழே கிடந்த மரக் கட்டையை கொண்டு மாரியம்மாளின் முகத்திலும் தாடையிலும் தாக்கியுள்ளார். இதில் மயங்கி விழுந்த மாரியம்மாளை அருகிலிருந்த வாய்க்காலில் தண்ணீரில் முகத்தை அழுத்தி கொன்றுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த மயிலாடுதுறை டி.எஸ்.பி அண்ணாதுரை தலைமையிலான செம்பனார்கோவில் போலீசார் சம்பவ இடம் வந்து விஜயகுமாரை கைது செய்தனர். தொடர்ந்து மாரியம்மாளின் உடலை கைப்பற்றி மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். துப்புரவு பணியாளரை கணவனே கொலை செய்த சம்பவம் கிராமமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


You must be logged in to post a comment.