மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இளம் காட்டு யானை சடலமாக கண்டுபிடிப்பு
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனசரக எல்லைக்குள் உள்ள வனப்பகுதியில் 13 முதல் 15 வயதுக்குட்பட்ட ஆண் காட்டு யானை ஒன்று இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
மேட்டுப்பாளையம் வனத்துறைக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, கோவை மாவட்ட வன பாதுகாவலர் வெங்கடேஷ் மற்றும் மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி, வனசரக அலுவலர் சசிகுமார் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர், வன உயிரின மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டு, யானையின் உடல் கூர் ஆய்வு (Postmortem) நடத்தினர். உடலில் இருந்து திசு மற்றும் உடற்கூறு மாதிரிகளை சேகரித்து, அவற்றை கோவை மற்றும் சென்னை வன ஆய்வகங்களுக்கு அனுப்பினர்.
இச்சம்பவம் தொடர்பாக வருவாய்த் துறை, காவல்துறை, மின்வாரியம் மற்றும் வன உயிரின ஆர்வலர்கள் சம்பவ இடத்தில் கலந்து கொண்டு ஆய்வு மேற்கொண்டனர்.
வனத்துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது: “யானையின் இறப்புக்கான சரியான காரணம் ஆய்வுக்கூடப் பரிசோதனை அறிக்கைகள் வந்த பிறகே உறுதி செய்யப்படும்,” என்றனர்.

