ஆன்லைன், சமூக வலைதளங்கள் மற்றும் போலியான இணையதளங்கள் மூலம் ஆஃபர் எனும் பெயரில் தினமும் பல்வேறு வகையான மோசடிகள் நடைபெற்று வருகிறது. ஆன்லைன் விளம்பர ஆஃபர்களை நம்பி பலர் மோசடி கும்பல்களிடம் சிக்கிக் கொள்வதும், தொடர்ந்து சைபர் கிரைம் பிரிவில் புகாரளிப்பதும் தொடர்கிறது. இந்நிலையில், சைபர் கிரைம் காவல்துறை சார்பில், பொதுமக்கள் அளிக்கும் மோசடி குறித்த புகார்களை விசாரித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், பகுதி நேர வேலை என்ற பெயரில் முதலீடு செய்ய வைத்து மோசடி செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து சென்னை சைபர் குற்றப்பிரிவு தலைமையகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சமீபகாலமாக, சைபர் குற்றவாளிகள் இணைய வழி டெலிகிராம் செயலி வாயிலாக பகுதி நேர வேலை தருவதாக பொதுமக்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி மக்களை ஏமாற்றுவதற்கான புதிய முறைகளை பயன்படுத்தி வருகின்றனர். Telegram செயலி மூலம் அவர்கள் கொடுக்கும் டாஸ்க் செய்து முடித்தால் பெரிய லாபம் திரும்ப கிடைக்கும் என எதிர்பார்ப்பை உருவாக்கி பொதுமக்களை முதலீடு செய்ய வைத்து ஏமாற்றி பணத்தை மோசடி செய்கின்றனர்.
2024 ஆம் ஆண்டின் ஆகஸ்டு மாதத்தில், புகார்தாரரிடம் Telegram-ல் எதிரி தன்னை “Room Raccoon Backend Website” எனும் நிறுவனத்தில் பணியாற்றுபவர் என அறிமுகப்படுத்திக் கொண்டு, தங்களது நிறுவனம் வாடிக்கையாளர்கள் மதிப்பீடு அளிப்பதன் அடிப்படையில் ஹோட்டல்களை முதன்மைப்படுத்தும் பணியை செய்து வருவதாக கூறி ஆன்லைன் மூலம் நீங்கள் வீட்டிலிருந்தே குறிப்பிட்ட ஹோட்டல்களுக்கு மதிப்பெண்கள் வழங்கும் பணியை செய்தால் உங்களது வங்கி கணக்கிற்கு தினந்தோறும் அதற்கான கமிசன் வரவு வைக்கப்படும் என நம்ப வைத்து போலியான “Room Raccoon Backend Website”-ல் புகார்தாரரை நம்பவைப்பதற்காக முதலில் மதிப்பீடு செய்ய வைத்து அதற்கான கமிசனாக ரூபாய் 959 வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
அடுத்த நாள் புகார்தாரரை மேற்படி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால் அதிக பணம் வழங்கப்படும் என ஆசை வார்த்தை கூறி நம்ப வைத்துள்ளார். அதன்பேரில் புகார்தாரர் ரூபாய் 8,000 முதலீடு செய்து அதற்கு கமிசனாக 15,917 பெற்றுள்ளார். அதன் பின்பு அடுத்த 90 ஹோட்டல்களுக்கு மதிப்பீடு தரும் வேலையை செய்வதற்காக புகார்தாரரிடமிருந்து பல்வேறு காரணங்களை கூறி மொத்தம் ரூ.7,31,166 பல்வேறு வங்கி கணக்குகள் மூலம் பெற்றுக்கொண்டு மேற்படி வேலை முடித்தவுடன் அவருடைய கணக்கில் கமிசனுடன் சேர்ந்து ரூ.10,90,000 பணம் இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. மேற்படி பணத்தை புகார்தாரரால் எடுக்க முடியவில்லை. மோசடிக்காரர்கள் மொத்த முதலீட்டை திருப்பித் தருவதாகக் கூறி, மேலும் ரூபாய் 5,45,000 முதலீடு செய்ய வேண்டுமென்று ஏமாற்ற முயன்றுள்ளனர்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்டவருக்கு சந்தேகம் வந்ததால், புகார்தாரர் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து சைபர் குற்றம் ரிபோர்டிங் போர்டல்-இல் புகார் பதிவு செய்துள்ளார். அதன் அடிப்படையில், திருப்பூர் மாவட்ட சைபர் கிரைம் 55/2024, u/s 66 D of the Information Technology Act 2000, Section 318 (4) of the BNS Act என வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை செய்யப்பட்டது. இந்த வழக்கின் நிதி பரிவர்த்தனைகளை சைபர் குற்றப் பிரிவு அலுவலர்கள் தீவிரமாக ஆராய்ந்தபோது, தர்மபுரியில் உள்ள 05 வங்கி கணக்குகளுக்கு மொத்தம் ரூ.2,65,298 சென்றுள்ளது தெரியவந்து விசாரிக்கையில் தர்மபுரியைச் சேர்ந்த செல்வக்குமார் என்பவர் அவருடைய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பெயரில் வங்கி கணக்குகளை சைபர்மோசடி மூலம் பெறப்படும் பணத்தை பெறுவதற்காக கமிசன் அடிப்படையில் பெற்று மற்றொரு எதிரியான திருவாரூரை சேர்ந்த கெளதம்குமார் என்பவரிடம் கமிசன் பெற்றுக் கொண்டு கொடுத்துள்ளார்.
எதிரி கௌதம்குமார், மேற்படி வங்கி கணக்குகளில் பெறப்பட்ட மோசடி பணத்தை Binance செயலி உதவியுடன் USDT ஆக மாற்றம் செய்து மேற்படி மோசடிக்கு கமிசன் பெற்றுக்கொண்டு உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதன் மூலம் மேற்படி நபர்கள் இருவரும் மோசடிக்காரர்களுக்கு தேவையான வங்கி கணக்குகளை வழங்கி, அதை மோசடி செய்யும் நோக்கத்தில் பயன்படுத்தியதும் தெரியவந்தது. இதற்காக 30-11-2024 அன்று குற்றவாளிகள் செல்வக்குமார் மற்றும் கௌதம்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு 01-12-2024 அன்று திருப்பூர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் சைபர் குற்றங்களில் இருந்து பாதுகாப்பாக இருக்க கீழ்கண்ட அறிவுரைகள் வழங்கப்படுகிறது:
பொதுமக்கள் சமூக வலைதளங்களில் பகுதி நேர வேலை என்ற பெயரில் வரும் விளம்பரங்களை நம்பி அதிக பணம் வரும் என பணத்தை முதலீடு செய்து ஏமாற வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது
அதிகபடியான லாபம் வருமென யாராவது தெரிவித்தால் அதன் மூலம் மோசடி அதிகளவில் நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே பொதுமக்கள் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
தனிப்பட்ட தகவல்கள் மற்றும் நிதி சார்ந்த தகவல்களை அறிமுகமில்லாத நபர்களிடம் தொலைபேசியில் அளிக்காதீர்கள்.
உங்கள் வங்கி மற்றும் கடன் பெற்ற கணக்குகளில் அனுமதிக்கப்படாத பரிவர்த்தனைகள் ஏதும் உள்ளதா என தவறாமல் சரிபார்க்கவும்.
மேலும், பொதுமக்கள் தங்களது வங்கிக் கணக்குகளை மற்றவர்கள் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏனெனில் இது போன்ற கணக்குகள் நிதி மோசடிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
யாரேனும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
புகாரைப் பதிவு செய்தல்: நீங்கள் இது போன்ற மோசடிக்கு ஆளாகியிருந்தால், சைபர் கிரைம் கட்டணமில்லா உதவி எண் 1930 ஐ டயல் செய்து சம்பவத்தைப் புகாரளிக்கவும் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் உங்களது புகாரைப் பதிவு செய்யவும்.
You must be logged in to post a comment.