புதுமண தம்பதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி-தடுப்பு சுகாதார பணிகள் தீவிரம்…

சுரண்டையை சேர்ந்த புதுமண தம்பதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் சுரண்டை பேருந்து நிலையம் அருகில் வசித்து வருபவர் 30 வயது வாலிபர். இவருக்கும் பாண்டிச்சேரியை சேர்ந்த 25 வயது பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு கடந்த 1ம் தேதி பாண்டிச்சேரியில் வைத்து திருமணம் நடந்தது.

தம்பதிகள் தங்கள் உறவினர்களுடன் சுரண்டைக்கு வந்து தங்கி தங்களுக்கு தேவையான பொருட்களை சுரண்டை மற்றும் தென்காசி பகுதி கடைகளில் தினமும் வாங்கி வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 24ம் தேதி வயிற்றுப்போக்கு மற்றும் காய்ச்சல் ஏற்படவே டாக்டர் ஆலோசனை படி பாவூர்சத்திரம் கொரோனா பரிசோதனை மையத்தில் பரிசோதனைக்காக மாதிரி கொடுக்கப்பட்டு நேற்று காலை புது மணத் தம்பதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து வீகேபுதூர் தாசில்தார் அமிர்தராஜ், ஆர்ஐ மாரியப்பன், சுரண்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜ்குமார், சுரண்டை பேரூராட்சி நிர்வாக அதிகாரி அரசப்பன், சுகாதார ஆய்வாளர்கள் ராஜேந்திர குமார், கிருஷ்ணமூர்த்தி, போலீஸ் ஏட்டு சமுத்திரக்கனி மற்றும் அதிகாரிகள் முகாமிட்டு தடுப்பு மற்றும் சுகாதார பணிகளை தீவீரபடுத்தி அப்பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளித்தனர். அப்பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டு பொது மக்கள் நடமாட தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து கொரோனா பாதிக்கப்பட்ட புது மணத் தம்பதிகளை தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!