கடல்பாசி உலர் தளம் கட்டிட பணி தரமற்ற முறையிலும் பணிகள் மந்தமாகவும் நடைபெறுவதாக புகார்: தரமாகவும் விரைந்தும் கட்டித்தர கோரிக்கை..!
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தொண்டி அருகே எம்.ஆர். பட்டினம், பாசிப்பட்டினம், உள்ளிட்ட கடலோர பகுதிகளில் பெருமளவிலான மீனவ மக்கள் பாசி வளர்ப்பில் ஆர்வம் காட்டி வருவாய் ஈட்டி வருகின்றனர். இந்த பாசிகள் கடல் மணற் பரப்பில் உலர்த்தப்பட்டு விற்பனை செய்யப்படுவதால் குறைவான விலைக்கே விற்பனையாகிறது.
இதனால் இந்தப்பகுதியில் கடற்பாசி உலர்தளங்கள் அமைத்து அதன் மூலம் சுத்தமாக பாசிகளை உலர வைத்து சேமித்து வைக்க கிடங்கு அமைத்து அதன் மூலம் வருமானம் அதிகரிக்க ஏதுவாக மத்திய அரசு பல லட்சம் ரூபாய் செலவில் உலர்தலம் மற்றும் உலர் வைப்பறைகள் கட்ட திட்டமிட்டு நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருகிறது.
தொண்டி அடுத்த எம்.ஆர்.பட்டினத்தில் கட்டப்பட்டு வரும் கடற்பாசி உலர்தள கட்டிடம் தரமற்ற முறையில் கட்டப்பட்டு வருகிறது. குறிப்பாக, சிமெண்ட் குறைவாக கலந்து மணலை அதிகமாக பயன்படுத்தி கட்டப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.
தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ள அந்தக் கட்டடத்தை கையால் தொட்டாலே சிமெண்ட் பூச்சுக்கள் பெயர்ந்து கையில் கொட்டுகிறது.சாதாரணமாகவே கடலோரங்களில் கட்டப்படும் வலிமையான கட்டிடங்களே கடல் காற்றில் அரிப்பு ஏற்பட்டு வரும் நிலையில், அரசுக்கட்டிட கட்டுமானப்பணி தரமற்ற முறையில் கட்டப்படுவது அனைத்து தரப்பினரையும் வருத்தமடையச் செய்துள்ளது.
மேலும், இந்த கட்டிடப்பணிகள் கடந்த ஆறு மாத காலமாக மந்தமாக கட்டப்பட்டு வரும் நிலையில் இதுவரை முழுமை அடையவில்லை என்ற குற்றச்சாட்டும் வைக்கப்படுகிறது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து தரமான கடற்பாசி உலர் தளம் கட்டிடம் கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
You must be logged in to post a comment.