தென்காசி மாவட்டத்தில் இரண்டு பெற்றோரையும் இழந்த குழந்தைகள் மற்றும் ஒரு பெற்றோர் இறந்து, மற்றொரு பெற்றோரால் பராமரிக்க இயலாத குழந்தைகள், அன்பு கரங்கள் நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் பயன்பெற உங்களுடன் ஸ்டாலின்” முகாம்களில் அல்லது மாவட்ட ஆட்சியர்/மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஆகியோரிடம் விண்ணப்பங்கள் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மிகவும் வறிய நிலையில் உள்ள குடும்பங்களில், தங்கள் இரண்டு பெற்றோரையும் இழந்து தங்களது உறவினர்களின் பாதுகாப்பில் குழந்தைகள் வளர்ந்து வருவதை அறிந்து, இக்குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாது காத்திடும் வகையில், அவர்களது பள்ளிப் படிப்பு வரை இடைநிற்றல் இன்றி அவர்கள் கல்வியைத் தொடர 18 வயது வரை மாதம் 2,000 ரூபாய் உதவித் தொகை வழங்குவதோடு மட்டும் அல்லாமல், பள்ளிப் படிப்பு முடித்தவுடன் கல்லூரிக் கல்வி மற்றும் உரிய திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் அவர்களுக்கு வழங்கிட உரிய நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படும் என அறிவித்தார்.
தமிழ்நாடு முதலமைச்சரின் இந்த அறிவிப்பிற்கு இணங்க, இரண்டு பெற்றோரையும் இழந்து, தங்களது உறவினர்களின் பாதுகாப்பில் வளர்ந்து வரும் குழந்தைகள் மற்றும் ஒரு பெற்றோர் இறந்து, மற்றொரு பெற்றோரால் பராமரிக்க இயலாத குழந்தைகளுக்கு அவர்களின் 18 வயது வரையிலான மாதந்திர உதவித் தொகை “அன்பு கரங்கள் நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசால் வழங்கப்படும்.
தமிழ்நாடு அரசின் இச்சீரிய திட்டத்தின் கீழ் பயன் பெற கீழ்க்கண்டோர் விண்ணப்பம் செய்யலாம்: ஆதரவற்ற குழந்தைகள் (பெற்றோர் இருவரையும் இழந்தவர்கள்), கைவிடப் பட்ட குழந்தைகள் (பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொரு பெற்றோர் குழந்தையை கைவிட்டுச் சென்று இருப்பின்) ஆதரவு தேவைப்படும் குழந்தைகள், (பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொரு பெற்றோர் மாற்றுத் திறன் தன்மை (Physically/mentally challenged) கொண்டவராக இருந்தால் ஆதரவு தேவைப்படும் குழந்தைகள், பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொரு பெற்றோர் சிறையில் இருந்தால் ஆதரவு தேவைப்படும் குழந்தைகள், (பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொரு பெற்றோர் உயிருக்கு ஆபத்தான நோய்களுடன் வாழ்ந்து வந்தால்) ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் தமிழ்நாடு அரசின் இச்சீரிய திட்டத்தின் கீழ் பயன் பெறலாம்.
தேவையான ஆவணங்கள்: குடும்ப அட்டையின் நகல், குழந்தையின் ஆதார் அட்டையின் நகல், குழந்தையின் வயது சான்று நகல் (பிறப்புச் சான்றிதழ்/ கல்வி மாற்றுச் சான்றிதழ் / மதிப்பெண் சான்றிதழ்). குழந்தையின் வங்கிக் கணக்குப் புத்தகத்தின் நகல் போன்ற ஆவணங்களுடன், “அன்பு கரங்கள்-நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் பயன்பெற தென்காசி மாவட்டத்தில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின்” முகாம்களில் அல்லது மாவட்ட ஆட்சியர்/மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஆகியோரிடம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்