இளைஞர்களின் சமூக பணியை அங்கீகரித்து முதலமைச்சரின் இளைஞர் மாநில விருது வழங்கப்பட உள்ளதால், தென்காசி மாவட்டத்தினை சார்ந்த தகுதி வாய்ந்த நபர்கள் முதலமைச்சர் மாநில இளைஞர் விருது பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் தெரிவித்துள்ளார். சமுதாய வளர்ச்சிக்கு சேவை ஆற்றும் இளைஞர்களின் சமூக பணியை அங்கீகரிக்கும் பொருட்டு, முதலமைச்சர் மாநில இளைஞர் விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத் தன்று 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது ரூ.1,00,000 ரொக்கம், பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கம் ஆகியவைகளை உள்ளடக்கியதாகும்.
அதன்படி, 2025 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் மாநில இளைஞர் விருது எதிர்வரும் 15.08.2025 அன்று நடைபெறும் சுதந்திர தின விழாவில் தமிழ்நாடு முதலமைச்சரால் வழங்கப்பட உள்ளது. இவ்விருது தொடர்பாக பின்வரும் தகுதிகள் வரையறுக்கப் பட்டுள்ளன. இவ்விருதானது 15 வயது முதல் 35 வயது வரையுள்ள ஆண்/பெண் ஆகியோர் விண்ணப்பிக்கலாம். ஏப்ரல் 1, 2024 (01.04.2024) அன்று 15 வயது நிரம்பியவராகவும், மார்ச் 31, 2025 (31.03.2025) அன்று 35 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். கடந்த நிதியாண்டில் (2024-2025) அதாவது 01.04.2024 முதல் 31.03.2025 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும்.
விருதிற்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்த பட்சம் 5 வருடங்கள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருத்தல் வேண்டும். (சான்று இணைக்கப்பட வேண்டும்) விண்ணப்ப தாரர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றி இருக்க வேண்டும். அவ்வாறு அவர்கள் செய்த தொண்டு கண்டறியப்படக் கூடியதாகவும், அளவிடக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும். ஒன்றிய/மாநில அரசுகள், பொதுத் துறை நிறுவனங்கள், பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் / பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்க இயலாது. விண்ணப்ப தாரருக்கு உள்ளூர் மக்களிடம் உள்ள செல்வாக்கு விருதிற்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும். இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கும் கால அளவு 03.04.2025 முதல் 03.05.2025 அன்று மாலை 4.00 மணி வரை ஆகும்.
விண்ணப்பங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளமான www.sdat.tn.gov.in http:// www.sdat.tn.gov.in இணைய தளத்தில் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் சமர்ப்பித்தல் வேண்டும். மேலும் விபரங்களுக்கு 04633 212580 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். பதிவு செய்யப்பட்ட பின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தாங்கள் சமூக நலனுக்காக செய்யப்பட்ட சான்றுகள், புகைப்படங்கள் ஆகியவற்றினை புத்தக வடிவில் தயார் செய்து (3 எண்ணங்கள்) மாவட்ட விளையாட்டு அலுவலகம் 163அ, ரயில்வே ரோடு, மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக பின்புறம் தென்காசி என்ற முகவரியில் 03.05.2025 அன்று மாலை 4 மணிக்குள் சமர்ப்பித்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்து உள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.