தென்காசி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் வேட்டைக்காரன் குளம் கிராமத்தில் நடந்தது. தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வேட்டைக்காரன் குளம் கிராமத்தில் 09.06.2025 அன்று கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமினை தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனி நாடார் முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தொடங்கி வைத்தார்.



பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது, தென்காசி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 12 முகாம்கள் வீதம் 10 ஊராட்சி ஒன்றியங்களுக்கு 120 முகாம்கள் நடத்தப்பட உள்ளது. முகாம்களில் நோய் வாய்ப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், குடற்புழு நீக்கம் செய்தல், செயற்கை முறை கருவூட்டல், மலடு நீக்க சிகிச்சைகள், சினை சரிபார்ப்பு, சுண்டு வாத அறுவை சிகிச்சை போன்ற சிறு அறுவை சிகிச்சைகள் மற்றும் கருப்பை மருத்துவ உதவி போன்ற நோய் தடுப்பு மற்றும் நோய் தீர்க்கும் பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு இலவசமாக வழங்கப்படும்.
இம்முகாம்களில் சிறந்த கால்நடை வளர்ப்பு முறைகளை பின்பற்றும் சிறந்த மூன்று விவசாயிகளுக்கு விருது வழங்கப்படும். கிடேரி கன்று பேரணி நடத்தப்பட்டு சிறந்த மூன்று கன்று உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். இம்முகாமில் நடமாடும் மருத்துவ வழி வழங்கப்படும் சேவைகளும் வழங்கப்பட்டுள்ளது. எனவே கால்நடை வளர்ப்போர் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி முகாம்கள் நடத்தப்படும் கிராமங்களில் தங்களது கால்நடைகளை அழைத்து வந்து பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்தார்.
இம்முகாமில், தென்காசி கோட்ட உதவி இயக்குநர் மரு.மு.மகேஷ்வரி, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மரு.வீ.சங்கர நாராயணன், கால்நடை மருத்துவர் மரு.சந்திரசேகர். மருத்துவக் குழுவில் கால்நடை உதவி மருத்துவர்கள் மரு.K.ரமேஷ், மரு.S.R.S. செல்வ குத்தாலிங்கம், மரு.P.சந்திரன், மரு.S.ரமாதேவி, கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் காவேரி சீனித்துரை, கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர், முத்துக் குமார், குணராம நல்லூர் ஊராட்சி தலைவர் சுபாசக்தி, மாவட்ட கவுன்சிலர் சாக்ரடிஸ், கவுன்சிலர் ஜான்சி ஜெபமலர் மற்றும் கால்நடை ஆய்வாளர்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்