தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அமைப்பு சாரா தொழிலாளர்கள் மற்றும் கைவினைஞர்கள் பயன்பெறும் வகையில் 20.05.2025 செவ்வாய்க் கிழமை அன்று சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. சிறப்பு முகாமில் அனைத்து தொழிலாளர்கள் மற்றும் கைவினைஞர்கள் தவறாது கலந்து கொண்டு பயன் பெற வேண்டும் என ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் அழைப்பு விடுத்துள்ளார்.
இது பற்றிய செய்திக் குறிப்பில் திருநெல்வேலி தொழிலாளர் நலத் துறை, தென்காசி மாவட்ட தொழில் மையம் மற்றும் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் இணைந்து நடத்தும் அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்கள் மற்றும் கலைஞர் கைவினைத் திட்ட பயனாளிகளுக்கான மாபெரும் விண்ணப்ப பதிவு சிறப்பு முகாம் வருகிற மே 20 செவ்வாய்க் கிழமை காலை ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இம்முகாமில், விவசாயம் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள், வாடகை வாகன ஓட்டுநர்கள், பனை மரத் தொழிலாளர்கள், காலணித் தொழிலாளர்கள், திருநங்கைகள், முடி திருத்துவோர், தையல் மற்றும் மண்பாண்டத் தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான அமைப்பு சாரா தொழிலாளர்களும் கலந்து கொண்டு பதிவு செய்து, நலவாரிய அட்டை முற்றிலும் இலவசமாக பெறலாம்.
தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினர்களாகும் தொழிலாளர்கள் மற்றும் கைவினைஞர்களுக்கு ஓய்வூதியம், மகப்பேறு கால உதவி, கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை, அரசு காப்பீட்டு திட்டம், பணிக் காலத்தில் இறந்தால் நிவாரணத் தொகை உள்பட பல்வேறு நிவாரணத் தொகை மற்றும் நல உதவிகள் கிடைக்கும். மேலும், கலைஞர் கைவினைத் திட்டத்தின் கீழ், மூங்கில், பிரம்பு, சணல், பனை ஓலை வேலைப் பாடுகள், பாய் முடைதல், கூடை பின்னுதல், கயிறு, துடைப்பான் செய்தல், மர வேலைப்பாடுகள், பொம்மைகள் தயாரித்தல், தோல் கைவினைப் பொருட்கள், மண் பாண்டங்கள், சுடு மண் வேலைகள், சிற்ப வேலைகள், தையல் தொழில், துணி நெய்தல், வெளுத்தல், தேய்த்தல் உள்ளிட்ட சுமார் 25 வகையான தொழில்கள் செய்யும் தொழில் முனைவோர், ரூ.50 ஆயிரம் முதல் ரூ.3 லட்சம் வரை கடனுதவி பெறும் வகையில், முற்றிலும் இலவசமாக பதிவு செய்து தரப்படும்.
முகாமில் கலந்து கொள்ள வரும் தொழிலாளர்கள் மற்றும் தொழில் முனைவோர் ஆதார், குடும்ப அட்டை, பான்கார்டு, பள்ளி மாற்றுச் சான்றிதழ், வங்கிக் கணக்கு புத்தகம், சாதிச் சான்று ஆகியவற்றின் நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 2, விரிவான திட்ட அறிக்கை, விலைப் புள்ளி பட்டியல் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும். அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இம்முகாமில், அனைத்து வகையான தொழிலாளர்களும், தொழில் முனைவோர்களும் கலந்து கொண்டு பயன் பெற வேண்டும் என ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.