தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் சைபர் கிரைம் மற்றும் ஆன்லைன் மோசடி குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.அரவிந்த் உத்தரவின் பேரில் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களிடையே சாலை விதிகள், பெண்கள் பாதுகாப்பு, போதைப் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து காவல் துறையினர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், 09.12.2025 அன்று கடையநல்லூர் பகுதியில் தென்காசி மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையினர் மற்றும் சோசியல் மனித உரிமை கழகம் இணைந்து நடத்திய பள்ளி மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு பேரணியினை சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜூலியஸ் சீசர் கொடியசைத்து துவக்கி வைத்தார். இப்பேரணியானது கடையநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் துவங்கி, கடையநல்லூர் சந்தை வழியாக சென்று கடையநல்லூர் காவல் நிலையத்தில் நிறைவு பெற்றது.

முன்னதாக பள்ளி மாணவர்களுக்கு சைபர் கிரைம் காவல் ஆய்வாளரால் சைபர் குற்றங்கள், ஆன்லைன் மோசடி, சைபர் கிரைம் உதவி எண் 1930, குழந்தைகளுக்கான உதவி எண் 1098, பெண்களுக்கான உதவி எண் 181 போன்ற உதவி எண்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. குறிப்பாக அனைவரும் தங்களின் அலைபேசியில் காவல் உதவி என்ற செயலியை (Kaaval Uthavi App) பதிவிறக்கம் செய்வது மூலம் தங்களுக்கோ அல்லது தங்களை சார்ந்தவர்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் அந்த செயலியில் உள்ள SOS என்ற பட்டனை அழுத்துவதன் மூலம் தாங்கள் இருக்கும் இடத்திற்கு காவல் உதவி வந்து சேரும்.
காவல் உதவி செயலியை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தயங்காமல் பயன்படுத்தலாம், இது அனைவரது செல்போன்களிலும் கட்டாயம் இருக்க வேண்டிய செயலி என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்நிகழ்ச்சியில் துணைக் காவல் கண்காணிப்பாளர் அறிவழகன், சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் வசந்தி, சோசியல் மனித உரிமை கழக நிர்வாகிகள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் காவல் துறையினர் உடன் இருந்தனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

